கர்நாடகத்தில் பறவைக் காய்ச்சல்: 44 மயில்கள் உயிரிழப்பு
பெங்களூரு : கர்நாடகத்தில் பறவைக் காய்ச்சலுக்கு 44 மயில்கள் உயிரிழந்துள்ளன.
கர்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டத்தில் 44 மயில்கள் திடீரென இறந்தன. இதற்கான காரணம் தெரியாத நிலையில், இறந்த மயில்களின் உடல்கள் போபாலில் உள்ள தேசிய உயர்பாதுகாப்பு விலங்கு நோய்கள் மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அது தொடர்பான ஆய்வறிக்கையில், 44 மயில்களும் எச்5என்1 எனப்படும் பறவைக் காய்ச்சலால் இறந்துவிட்டதாக வனத் துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை மேலும் கூறியது:
Advertisement
தும்கூரு மாவட்டத்தின் குலுர் ஒன்றியத்தைச் சேர்ந்த ஹுல்லேனஹள்ளி, பைரசந்திரா கிராமங்கள், உர்டிகெரே ஒன்றியத்தைச் சேர்ந்த பொம்மனஹள்ளி மற்றும் ஹோலிஹள்ளி கிராமங்களில் ஏப். 16 முதல் 21ஆம் தேதிவரையிலான காலகட்டத்தில் 44 மயில்கள் இறந்தன.
இவற்றின் உடல்களை சோதனை செய்தபோது, பறவைக் காய்ச்சலுக்கு இறந்தது உறுதியாகியுள்ளது.
இதை தொடர்ந்து, உயிரியல் பூங்காக்கள், சாலைகள், சரணாலயங்கள், மாகடி ஏரி, கொக்கரே பெல்லூர் சமுதாய பறவைகள் சரணாலயம் உள்ளிட்ட வனப் பகுதிகளில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க மத்திய அரசு வழிகாட்டுதலின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
உள்ளூர் அல்லது வெளியூர் பறவைகள் இறந்தால், அவற்றின் உடல்களைச் சேகரித்து, உடனடியாக சோதனைக்கு அனுப்ப வேண்டும் என்று வனத் துறை உயரதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.