கர்நாடகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு: 40 மயில்கள் உயிரிழப்பு
தும்கூரு மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் வைரஸ் பாதிப்பு காரணமாக சுமார் 40-க்கு மேற்பட்ட மயில்கள் உயிரிழந்துள்ளது தொடர்பாக...
கர்நாடகம் மாநிலம், தும்கூரு மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் வைரஸ் பாதிப்பு(எச்5என்1) காரணமாக சுமார் 40-க்கு மேற்பட்ட மயில்கள் உயிரிழந்துள்ளதாக துணை ஆணையர் சுபா கல்யாண் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து துணை ஆணையர் செய்தியாளர்களுடன் கூறியதாவது:
தும்கூரு பகுதியில் காட்டுப் பறவைகள் மற்றும் மயில்கள் உயிரிழந்ததாகத் தகவல்கள் வந்தன. சுமார் 40-க்கு மேற்பட்ட மயில்கள் உயிரிழந்துள்ளன. இதையடுத்த உயிரிழந்த மயில்களின் மாதிரிகள் போபாலில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையில் பறவைக் காய்ச்சல் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Advertisement
இதையடுத்து வைரஸ் பாதிப்பு பகுதியைச் சுற்றி 10 கிலோமீட்டர் சுற்றளவுக்கு கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த பகுதியில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவு மீட்புக் குழுக்கள் மூலம் அந்த பகுதியில் தொடர் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த பகுதியில் உள்ள 31 கோழி இறைச்சிக் கடைகள், 10 கோழிப் பண்ணைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் அச்சப்பட வேண்டாம்
மேலும், மக்கள் அச்சப்பட வேண்டாம். மக்கள் நன்கு சமைக்கப்பட்ட மற்றும் வேகவைத்த இறைச்சியை மட்டுமே உண்ணுமாறு துணை ஆணையர் சுபா கல்யாண் அறிவுறுத்தியுள்ளார்.
முன்னதாக, கடந்த மார்ச் மாதம் சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோழிப் பண்ணையில் மட்டும் சுமார் 5,500 கோழிகள் உயிரிழந்தது. இதையடுத்து பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள ஒரு அரசுப் பண்ணையிலிருந்து 10 கிலோமீட்டர் சுற்றளவுக்கு கோழிப் பண்ணை சார்ந்த பொருள்களை விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.