கோலார் தங்கவயலில் குழந்தைகள் தமிழ் மொழியை கற்றறிய வேண்டும் என்ற நோக்கில் தமிழ் மொழி பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.
தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கோலார் தங்கவயலில் எராளமான தமிழ் பள்ளிக்கூடங்கள் இருந்தன.
கோலார்தங்கவயலுக்கு வணிகம் செய்ய வந்த வேற்று மொழியினரும் தமிழ் கற்ற காலமும் இருந்தது. காலப்போக்கில் கர்நாடகத்தில் மொழி சிறுபான்மையினர் மீதான நெருக்கடியும், பெற்றோர்களின் ஆங்கிலம் மீதான மோகமும், தமிழ் பள்ளிகளே இல்லை என்ற நிலையும் ஏற்பட்டு விட்டன.
இந்த நிலையில், பெங்களூரு தமிழ் சங்கமும் , உலகத் தமிழ்க் கழகத்தின் தங்கவயல் கிளையும் இணைந்து கோலார் தங்கவயலில் இலவச தமிழ்மொழி பயிற்சி வகுப்புகளை நடத்த முடிவு செய்தன.
இதன்படி, கோலார்தங்கவயலில் உள்ள மாரிகுப்பத்தின் அல்லிக்கடையில் உள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை எதிரே தமிழ்ப்பயிற்சி வகுப்பு தொடக்கி வைக்கப்பட்டது.
இந்த வகுப்பை புலவர் கார்த்திகாயினி தொடக்கிவைத்தார். நிகழ்ச்சியில் உலகத் தமிழ்க் கழகப் பொறுப்பாளர்கள் கி.சி.தென்னவன், துரைசெல்வன், அன்பரசு, கொடையரசன், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கோவலன், ராமு, வேளாங்கண்ணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், வாரம்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாரிகுப்பத்தில் உள்ள கே.எஸ்.வாசன் படிப்பகத்தில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என்றும் வரும்காலத்தில் கோலார்தங்கவயலின் பல்வேறு பகுதிகளிலும் தமிழ்ப்பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.