கர்நாடகத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மொத்த வாக்குப்பதிவு 68.61 சதவீதம் என்று மாநில தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கர்நாடகத்தில் ஏப். 18, 23-ஆம் தேதிகளில் 2 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. முதல் கட்டமாக 14 தொகுதிகளிலும், 2-ஆம் கட்டமாக 14 தொகுதிகளும் தேர்தல் நடைபெற்றது. முதல் கட்டத்தில் 68.81 சதவீதம், 2-ஆம் கட்டமாக 68.43 சதவீதமும் வாக்குகள் பதிவாயின. 28 தொகுதிகளிலும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது.
இதன் மொத்த வாக்குப்பதிவு 68.61 சதவீதம். கடந்த மக்களவைத் தேர்தலை ஒப்பிடுகையில், நிகழாண்டு வாக்குப்பதிவு சற்று அதிகரித்துள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 67.28 சதவீதம் வாக்குகள் பதிவாயின. அதிகபட்சமாக மண்டியா தொகுதியில் 80 சதவீதம், சிவமொக்கா தொகுதியில் 76.43 சதவீதம் வாக்குகள் பதிவாயின. குறைந்தபட்சமாக மத்திய பெங்களூரு தொகுதியில் 49.75 சதவீதமும், ராய்ச்சூர் தொகுதியில் 57.91 சதவீதமும் பதிவாயின என்றார்.