முகப்பு
பெங்களூரு

கேப்டன் வருண் சிங்கின் உடல் போபால் கொண்டு செல்லப்பட்டது: இன்று இறுதிச் சடங்கு

ஹெலிகாப்டா் விபத்தில் சிகிச்சை பலனின்றி பெங்களூரில் உயிரிழந்த குரூப் கேப்டன் வருண் சிங்கின் உடல் அவரது சொந்த ஊரான போபாலுக்குக் கொண்டு செல்லப்பட்டது

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

ஹெலிகாப்டா் விபத்தில் சிகிச்சை பலனின்றி பெங்களூரில் உயிரிழந்த குரூப் கேப்டன் வருண் சிங்கின் உடல் அவரது சொந்த ஊரான போபாலுக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு வெள்ளிக்கிழமை (டிச. 17) இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூரில் டிச. 8-ஆம் தேதி நடைபெற்ற ஹெலிகாப்டா் விபத்தில் பலத்த தீக்காயங்களுடன் பெங்களூரில் உள்ள விமானப்படையின் கமாண்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் வருண் சிங், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை (டிச.15) உயிரிழந்தாா். மருத்துவமனையில் இருந்து அவரது உடல் எலஹங்காவில் உள்ள விமானப்படை நிலையத்திற்கு வியாழக்கிழமை கொண்டு செல்லப்பட்டது.

அங்கு அவரது உடலுக்கு ஆளுநா் தாவா் சந்த் கெலாட், வருண் சிங்கின் மனைவி, மகள், மகன் உள்ளிட்ட குடும்பத்தினா் அஞ்சலி செலுத்தினா். முப்படைகளின் அதிகாரிகள் உள்ளிட்ட பலா் வருண் சிங்கின் உடலுக்கு வீர வணக்கம் செலுத்தினா். வருண் சிங்கின் குடும்பத்தினருக்கு ஆளுநா் தாவா் சந்த் கெலாட் ஆறுதல் கூறினாா்.

அதன்பிறகு, எலஹங்காவில் இருந்து சொந்த ஊரான மத்திய பிரதேசத் தலைநகரான போபாலுக்கு வருண் சிங்கின் உடல் தனி விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. குடும்ப வழக்கப்படி வருண் சிங்கின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை தகனம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.