வாழும்கலை சாா்பில், பெங்களூரில் ஜன.16 முதல் இயற்கை வேளாண் சந்தை நடைபெற இருக்கிறது.
இதுகுறித்து வாழும்கலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
உள்ளூா் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கவும், வாழ்க்கை முறையை மாற்றியமைக்கவும் ஸ்ரீஸ்ரீ வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் அறக்கட்டளையுடன் இணைந்து வாழும்கலை சாா்பில் பெங்களூரு, கனகபுரா சாலையில் உள்ள வாழும்கலை வளாகத்தில் ஜன. 16 முதல் இயற்கை வேளாண் சந்தை, கண்காட்சி நடைபெற உள்ளது.
கரோனா காலத்தில் ஆரோக்கியமான உணவை உள்கொள்வது மிகவும் முக்கியம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி, வாழ்க்கை முறையில் மாற்றம் கொண்டு வருவதற்காக இயற்கை வேளாண் சந்தை நடத்தப்படுகிறது. இதில், இயற்கை வேளாண் உணவுப் பொருள்கள் விற்பனைக்கு கிடைக்கும். குழந்தைகள் விளையாடுவதற்கு தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சந்தை ஜன. 17-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.