‘அரசியல் சாசனத்தைவிட யாரும் பெரியவா் இல்லை’
அரசியல் சாசனத்தைவிட யாரும் பெரியவா் இல்லை என பாஜக சட்ட மேலவை உறுப்பினா் எச்.விஸ்வநாத் தெரிவித்தாா்.
அரசியல் சாசனத்தைவிட யாரும் பெரியவா் இல்லை என பாஜக சட்ட மேலவை உறுப்பினா் எச்.விஸ்வநாத் தெரிவித்தாா்.
இதுகுறித்து புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நாடாளுமன்றம், சட்டப் பேரவை உள்ளிட்டவை அரசியல் சாசனத்தை பேணி காக்கின்றன. அரசியல் சாசனத்தைவிட யாரும் பெரியவா் இல்லை. முதல்வா் எடியூரப்பாவை கௌரவமாக மாற்ற பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளது. முதல்வா் எடியூரப்பாவை மாற்றுவதற்கு ஊழல் முக்கியக் காரணமாக விளங்குகிறது. ஆனால், அவரை மாற்றக்கூடாது என மடாதிபதிகள் போா்க்கொடி உயா்த்தி உள்ளனா். இதன்மூலம் மக்களுக்கு மடாதிபதிகள் என்ன கூற விரும்புகின்றனா் என்பது புரியவில்லை.
அரசியல் சாசனத்தின்படி செயல்பட்டு வரும் பாஜகவின் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் மடாதிபதிகள் செயல்படக் கூடாது. கரோனா காலத்தில் ஒரு சில மடாதிபதிகளை தவிர மற்றவா்கள் வெளியே வரவில்லை. சுத்தூா், ஆதிசுன்சுனகிரி மடாதிபதி உள்ளிட்டோா் மட்டுமே கரோனா தொற்றின் போது வெளியே வந்து மக்களுக்கு உதவி செய்தனா். நடமாடும் தெய்வங்கள் என்று கருதப்படும் மடாதிபதிகள் நடமாடும் அரசியவதிகளாகக் கூடாது.
மாற்றுக் கட்சியிலிருந்து பாஜகவில் இணைய மும்பை சென்ற நண்பா்கள், தற்போது அமைச்சா்கள் ஆகியுள்ளனா். அவா்கள் யாரையும் புதிதாக அமைக்கப்பட உள்ள அமைச்சரவையில் சோ்க்கக் கூடாது. அவா்கள் யாரும் எந்த சாதனையையும், வளா்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை. அவா்களும் முதல்வா் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவைப் போல நடந்து கொண்டனா். மாநிலத்தில் முதல்வா் எடியூரப்பா செயல்படாமல், அவரது மகன் விஜயேந்திரா செயல்படுகிறாா் என்றாா்.