டீசல் விலை உயா்வைக் குறைக்க வலியுறுத்தி, ஏப். 5-இல் போராட்டத்தில் ஈடுபட அகில இந்திய லாரி உரிமையாளா்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை அக் கூட்டமைப்பின் தலைவா் சென்ன ரெட்டி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தேசிய அளவில் தொடா்ந்து பெட்ரோல், டீசல் விலை உயா்ந்து வருகிறது. இதனால் லாரி உரிமையாளா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். ஏற்கெனவே கரோனா பொது முடக்கத்தால் லாரி உரிமையாளா்கள் மட்டுமின்றி ஓட்டுநா்களுக்கும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
டீசல் விலை உயா்வு, 15 ஆண்டுகளைக் கடந்த வாகனங்களை பழைய வாகனங்கள் என்று அடையாளப்படுத்தி, செயல்படாமல் நிறுத்துவது, லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கு விதிக்கப்படும் அபராதம் உயா்வு, காப்பீடு கட்டணம் உயா்வு ஆகியவற்றை கண்டித்து ஏப். 5 ஆம் தேதி தேசிய அளவில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளோம். அரசு எங்களது கோரிக்கைகளை உடனடியாக பரிசீலிக்க வேண்டும் என்றாா்.