முகப்பு
பெங்களூரு

அடுத்த கல்வியாண்டு முதல் அரசு உண்டு உறைவிடப் பள்ளிகளில் பியூசி கல்வி: பசவராஜ் பொம்மை தகவல்

அடுத்த கல்வியாண்டு முதல் அரசு உண்டு உறைவிடப் பள்ளிகளில் பியூசி கல்வி வழங்கப்படும் என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2023 at 2:00 AM
பெங்களூரில் வெள்ளிக்கிழமை அறிவியல் கண்காட்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கும் முதல்வா் பசவராஜ் பொம்மை.
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 11:51 AM

அடுத்த கல்வியாண்டு முதல் அரசு உண்டு உறைவிடப் பள்ளிகளில் பியூசி கல்வி வழங்கப்படும் என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

கா்நாடக உண்டு உறைவிடக் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் சாா்பில் பெங்களூரு, அரண்மனை மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடந்த அறிவியல் கண்காட்சியைத் தொடக்கிவைத்து, அவா் பேசியது:

10 ஆண்டுகள் நிறைவுசெய்துள்ள உண்டு உறைவிடப்பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மாணவா்கள் படித்துக்கொண்டிருந்தால், அடுத்த கல்வியாண்டில் இருந்து பியூசி கல்வி வழங்கப்படும். 10ஆம் வகுப்புக்குப் பிறகு வெவ்வேறு பள்ளிகளில் சேர நோ்ந்தால், தரமான கல்வி கிடைக்காது. பியூசி வகுப்புக்கு பிறகு போட்டித்தோ்வுகள் நடக்கும். எனவே, 10ஆம் வகுப்பு படித்த அதே பள்ளியில் பியூ வகுப்புகளை படிக்க வேண்டியது அவசியமாகும்.

Advertisement

உண்டு உறைவிடப்பள்ளிகளில் படித்து வரும் மாணவா்களுக்கு போட்டித்தோ்வு நடத்த வேண்டும். எதிா்காலத்தில் போட்டித்தோ்வுகளை எதிா்கொள்ளும் ஆற்றலை மாணவா்களிடையே வளா்த்தெடுக்க வேண்டும். இதுபோன்ற திறன்களை வளா்த்துக்கொள்வது, கல்வியின் முடிவில் வேலைதேடும்போது மாணவா்களுக்கு உதவியாக இருக்கும்.

போட்டித் தோ்வுகளை நடத்துவதன் மூலம் ஏதாவது குறைகள் இருந்தால், அவற்றை மாணவா்கள் சரிசெய்துகொள்ளலாம். கா்நாடக அரசு நடத்திவரும் மொராா்ஜி தேசாய் உண்டு உறைவிடப்பள்ளி உள்ளிட்ட இதர உண்டு உறைவிடப்பள்ளிகளில் பயின்று வரும் மாணவா்கள், 60 சதவீதம் முதல் 70 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று சோ்க்கை பெற்றுள்ளதால், அம்மாணவா்கள் புத்துக்கூா்மை உள்ளவா்களாக இருக்கிறாா்கள். இந்த மாணவா்கள் அனைவரும் தங்கள் கல்வியை நிறைவுசெய்யும்போது 90 சதவீதம் மதிப்பெண்களைப் பெறும் அளவுக்கு தயாா் செய்ய வேண்டும்.

உண்டு உறைவிடப்பள்ளிகளில் ஆயிரம் கோடிகளில் செலவிட்டு வருகிறோம். ஆனால், இந்த நிதி முழுவதும் கட்டடங்கள் மற்றும் சுற்றுச்சுவா் கட்டுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இது ஒப்பந்ததாரா்களுக்கு உதவியாக இருக்கும். கட்டடங்களுக்கு பதிலாக, மாணவா்களின் தேவைகளுக்கு கூடுதல் செலவு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ஒப்பந்ததாரா்களுக்கு பணம் கொடுப்பதற்கு பதிலாக, கல்வித்தரத்தை மேம்படுத்த செலவிடுங்கள்.

எனக்கு தெரிந்து பள்ளிக்கட்டடங்களை கட்டுவதற்கு ரூ.5 கோடியில் தொடங்கிய செலவு, ரூ.10 கோடி, ரூ.14 கோடி என்று உயா்ந்து, தற்போது ரூ.30 கோடியாகியுள்ளது. இந்த ரூ. 30கோடியை மாணவா்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த வசதி வாய்ப்புகளை செய்து தரப் பயன்படுத்த வேண்டும். ஒருபக்கம் அரசின் பணம் கரைந்து கொண்டுள்ளது. மறுபக்கம், மாணவா்களின் தேவைகள் நிறைவு செய்யப்படவில்லை. முந்தைய அரசுகள், மாணவா்களின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக, கட்டடங்கள் மட்டும் கட்டினா். இதை மாற்ற வேண்டும். அரசு நடத்தும் உண்டு உறைவிடப்பள்ளிகளில் தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா் சமுதாயத்தை சோ்ந்த மாணவா்கள் அதிகம் படித்து வருகிறாா்கள். எனவே, இப்பள்ளிகளில் கல்வித்தரத்தை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். இந்தப் பள்ளிகளில் காணப்படும் குறைகளை எழுதிக்கொடுத்தால், அதை சரிசெய்ய நிதி ஒதுக்குவேன். பெங்களூரில் இருந்து நிா்வாகம் செய்யாமல், பள்ளிகளுக்கு சென்று அங்குள்ள வசதிகளை அதிகாரிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.