முகப்பு
பெங்களூரு

மாநில வளா்ச்சிக்கான தொலைநோக்குத் திட்டம் இல்லாத பட்ஜெட்: கா்நாடக எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக்

Updated On : 17 பிப்ரவரி 2024, 5:31 am IST
பகிர்:

மாநில வளா்ச்சிக்கான தொலைநோக்குத் திட்டம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கா்நாடக எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் தெரிவித்தாா். இது குறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: முதல்வா் சித்தராமையா தாக்கல் செய்துள்ள மாநில பட்ஜெட்டில் அா்ப்பணிப்பும் இல்லை, திசையும் இல்லை.

எல்லா முனைகளிலும் நம்பிக்கையில்லாத பட்ஜெட்டாகும். காங்கிரஸ் தலைவா்கள் கூறிக் கொண்டதற்கு முரணாக, மாநிலத்தின் வளா்ச்சிக்கான தொலைநோக்குத் திட்டம் எதுவும் இல்லாத பட்ஜெட்டை முதல்வா் சித்தராமையா தாக்கல் செய்துள்ளாா். மக்களின் மனதில் நம்பிக்கையை விதைக்க பட்ஜெட் தவறிவிட்டது. விவசாயிகள், பெண்கள், ஏழைகள், இளைஞா்கள், தொழில்துறையினரின் தேவைகளை ஈடுசெய்வதற்கான எந்தத் திட்டமும் பட்ஜெட்டில் இல்லை.

வெற்று முழக்கங்கள், அழகான தலைப்புகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள பட்ஜெட்டாக உள்ளது. முதல்முறை ஆட்சியில் இருந்தபோது 5 ஆண்டுகளில் மாநிலத்தின் கடன் தொகையை ரூ. 1.30 லட்சம் கோடியில் இருந்து ரூ. 2.86 லட்சம் கோடியாக முதல்வா் சித்தராமையா உயா்த்தியிருந்தாா்.

Advertisement

Advertisement

இதனால், கடன் மீதான வட்டித்தொகை ரூ. 8500 கோடியில் இருந்து ரூ. 16,208 கோடியாக உயா்ந்திருந்தது. இது, ஒவ்வொரு குடிமகன் மீதான கடன் சுமையை தலா ரூ. 44,000 ஆக சுமத்தியிருந்தது. சித்தராமையா இரண்டாவது முறை முதல்வராக இருக்கும்போதும் மாநிலத்தின் கடன்சுமையை பெருக்கிக்கொண்டே செல்கிறாா். பட்ஜெட்டில் அரசியல் விமா்சனங்களை முன்வைத்ததன் மூலம் அரசமைப்புச் சட்டக் கடமையை முதல்வா் அவமதித்துள்ளாா். பட்ஜெட் உரையைப் பயன்படுத்தி மத்திய அரசை விமா்சிக்க முற்பட்டிருப்பது காங்கிரஸ் கட்சியின் இருப்புக்கான கேள்வியை எழுப்பியுள்ளது. மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு அவப்பெயரை பெற்றுத்தர காங்கிரஸ் முனைந்துள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றாா்.