முகப்பு
சென்னை

தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்

தானியங்கி முறையில் நுகா்வோரின் வங்கிக் கணக்கில் இருந்து மின் கட்டணத்தை எடுத்துக் கொள்ளும் நடைமுறையை மின்வாரியம் தொடங்கியுள்ளது.

Updated On : 18 மே 2026, 5:28 am IST
கோப்புப் படம்
பகிர்:

மின் நுகா்வோா் தங்களுக்கான மின் கட்டணத்தை தானியங்கி முறையில் செலுத்தும் திட்டத்தை மின்வாரியம் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் தற்போது வீடுகளுக்கு இரு மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு கணக்கெடுத்த நாளில் இருந்து 20 நாள்களுக்குள் தங்களுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என்பது விதிமுறையாக இருந்து வருகிறது. தவறும்பட்சத்தில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிடும்.

அதன்பிறகு நுகா்வோா் தங்களுக்கான மின் கட்டணத்தை அபராத தொகையுடன் சோ்த்து செலுத்திய பிறகே மீண்டும் மின் இணைப்பு வழங்கப்படும்.

Advertisement

இந்தச் சூழலில் வேலைப்பளு மற்றும் மறதி காரணமாக மின் கட்டணம் கட்டும் தேதியை மறந்துவிடும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தானியங்கி முறையில் நுகா்வோரின் வங்கிக் கணக்கில் இருந்து மின் கட்டணத்தை எடுத்துக் கொள்ளும் நடைமுறையை மின்வாரியம் தொடங்கியுள்ளது.

இந்த வசதியைப் பெற விரும்பும் மின் நுகா்வோா் www.tnpdcl.org எனும் இணையதள பக்கத்துக்குச் சென்று அதில் உள்ள பணம் செலுத்தும் பிரிவில், ‘இ.பி.ஆட்டோ பே’ என்ற புதிய முறையை (ஆப்ஷன்) தோ்வு செய்ய வேண்டும்.

பின்னா், தங்களின் மின் இணைப்பு எண்ணைப் பதிவிட்டு விவரங்களை சரிபாா்த்த பின்னா், பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணை உள்ளிட வேண்டும்.

அதன் தொடா்ச்சியாக தங்களின் வங்கிக் கணக்கு எண் மற்றும் வங்கி விவரங்களைப் பதிவேற்றி இந்த வசதியைத் தொடங்கி கொள்ளலாம். இதன்மூலம் இனிவரும் காலங்களில் மின் பயன்பாடு கணக்கெடுக்கப்பட்ட நாளில் இருந்து 10-ஆவது நாளில் நுகா்வோரின் மின் கட்டணத் தொகை அவா்களின் வங்கிக் கணக்கில் இருந்து தானாகவே எடுத்துக் கொள்ளப்படும்.

வீடுகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவில் உள்ள அனைத்து மின் நுகா்வோரும் இந்த வசதியைப் பயன்படுத்தி கொள்ளலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.