நட்சத்திர ஹோட்டல் ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்க மாநகராட்சி தாமதிப்பது ஏன்?
சென்னை, ஜூன் 26: சென்னை மாநகராட்சிக்கு சாதகமாக சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரும், நட்சத்திர ஹோட்டல் நிர்வாகம், ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்பதற்கு மாநகராட்சி அதிகாரிகள் தாமதிப்பது ஏன் எ
சென்னை, ஜூன் 26: சென்னை மாநகராட்சிக்கு சாதகமாக சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரும், நட்சத்திர ஹோட்டல் நிர்வாகம், ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்பதற்கு மாநகராட்சி அதிகாரிகள் தாமதிப்பது ஏன் என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
மாநகராட்சியின் இந்த அலட்சியம், ஹோட்டல் நிர்வாகத்தினர் மீண்டும் தடை உத்தரவை பெற வழி வகுத்துவிடும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் முன்பு, மாநகராட்சிக்கு சொந்தமான 163 சதுர மீட்டர் காலி இடம் ஆக்கிரமிக்கப்பட்டு அதில் வாகன நிறுத்தம், நீரூற்று, சுற்றுச்சுவர் ஆகியவற்றை ஹோட்டல் நிர்வாகம் கட்டியுள்ளது. இந்த ஆக்கிரமிப்பு தொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஹோட்டல் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. பின்னர், ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடிக்கும் முயற்சியை மாநகராட்சி மேற்கொண்டது. இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி, ஹோட்டல் நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் மாநகராட்சியின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
Advertisement
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி கே. சந்துரு முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது குறித்து மாநகராட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி, மாநகராட்சியின் நடவடிக்கைக்கு தடை கோரி ஹோட்டல் நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இரண்டு தினங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், நிலத்தை மீட்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் மாநகராட்சி அதிகாரிகள் இதுவரை எடுக்கவில்லை.
மாநகராட்சிக்குத் தெரியாமல், மீண்டும் ஹோட்டல் நிர்வாகத்தினர் நீதிமன்றத்தை அணுக முடியாத வகையில் கேவியட் மனுவை மாநகராட்சி அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். தீர்ப்பு வழங்கிய உடனேயே இதை தாக்கல் செய்யலாம். இது ஹோட்டல் நிர்வாகத்தினர், நீதிமன்றத்தில் மீண்டும் தடை உத்தரவு பெறுவதைத் தடுக்க ஏதுவாக இருக்கும். ஆனால், தீர்ப்பு வழங்கி இரண்டு நாள்கள் ஆன பின்னரும்கூட மாநகராட்சி அதிகாரிகள் கேவியட் மனுவை தாக்கல் செய்யவில்லை. ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிப்பதற்கான முயற்சியையும் எடுக்கவில்லை. சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்துக்கு அருகில் விக்டோரியா பொதுக் கூடத்தை சுற்றிலும் அமைந்திருந்த கடைகளை, நீதிமன்ற உத்தரவு கிடைத்த உடனேயே மாநகராட்சி அதிகாரிகள் இடித்துத் தள்ளினர். முதலில் மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுத்தவுடன், கடைக்காரர்கள் அனைவரும் மாநகராட்யிசின் நடவடிக்கைக்கு தடை உத்தரவு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மாநகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. உடனடியாக கடைகள் இடித்துத் தள்ளப்பட்டன. மீண்டும் கடைக்காரர்கள் நீதிமன்றத்தை அணுகிய பின்னரே, அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தரப்பட்டு, எஞ்சியுள்ள கடைகளும் அப்புறப்படுத்தப்பட்டன.
இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியது: உயர் நீதிமன்ற தீர்ப்பின் உத்தரவு நகல் இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. இருந்தபோதும் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை கேவியட் மனு தாக்கல் செய்யப்படும். அன்றைய தினமே ஹோட்டல் நிர்வாகம் ஆக்கிரமித்துள்ள இடத்தை மீட்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றார்.