போக்குவரத்து மாற்றம்: அண்ணா சாலையில் குழப்பம்
சென்னை, மார்ச் 3: சென்னை மெட்ரோ ரயில் சேவைக்காக சுரங்கம் அமைக்கும் பணிகளுக்காக அண்ணா சாலையில் சனிக்கிழமை அமலுக்கு வந்த போக்குவரத்து மாற்றத்தால் வாகன ஓட்டிகள் குழப்பமடைந்தனர். சென்னை அண்ணா சாலையில் எல்
சென்னை, மார்ச் 3: சென்னை மெட்ரோ ரயில் சேவைக்காக சுரங்கம் அமைக்கும் பணிகளுக்காக அண்ணா சாலையில் சனிக்கிழமை அமலுக்கு வந்த போக்குவரத்து மாற்றத்தால் வாகன ஓட்டிகள் குழப்பமடைந்தனர்.
சென்னை அண்ணா சாலையில் எல்.ஐ.சி., ஆயிரம் விளக்கு பகுதிகளில் மெட்ரோ ரயிலுக்காக சுரங்க ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் சனிக்கிழமை தொடங்கின.
இதனால், அண்ணா சாலையில் திரு.வி.க. சாலை சந்திப்பு முதல் வெலிங்டன் சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
Advertisement
இச்சாலையில் ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் இருந்து எல்.ஐ.சி. நோக்கி வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படும். வெலிங்டன் சந்திப்பிலிருந்து அண்ணா மேம்பாலம் நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இந்த போக்குவரத்து மாற்றம் குறித்து சில நாள்களுக்கு முன்பே சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்தது. இருப்பினும் வாகன ஓட்டிகள் இடையே காலை முதல் குழப்பம் ஏற்பட்டது.
முக்கியமாக ராயப்பேட்டை, கோபாலபுரம் பகுதிகளில் இருந்து சென்ட்ரல் செல்லும் வாகன ஓட்டிகள் எந்த வழியில் செல்வது என தெரியாமல் குழம்பினர்.
காவல்துறையினரால் வழி மாற்றம் செய்யப்பட்ட பலகைகள் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்தாலும், புதிய நடைமுறைகளைத் தெரிந்து கொள்ள முடியாமல் அவதிப்பட்டனர். ஆனாலும் வாகன ஓட்டிகளின் சந்தேகங்களுக்கு போலீஸார் பதிலளித்து அவர்களை வழிநடத்தினர்.
விரிவாக காணப்பட்ட ஜி.பி.சாலை: கார் உதிரி பாகங்கள் மற்றும் காரை அலங்கரிக்கும் பொருள்கள் விற்கப்படும் ஜெனரல் பாட்டர்ஸ் சாலை விரிவாக காணப்படும். இந்தச் சாலையின் இரு ஓரங்களிலும் உதிரி பாகங்கள் வாங்குவதற்காக ஏராளமான கார்கள் நிறுத்தப்படும். இதனால் இந்தச் சாலை எப்போதும் நெரிசலாக காணப்படும்.
இப்போது ஏற்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றத்தின்படி, ஜி.பி.சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுவது தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜி.பி.சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு, வெலிங் டன் சந்திப்பிலிருந்து வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. இந்தப் போக்குவரத்து மாற்றம் காரணமாக காலம்காலமாக கார்களுக்கு உதிரி பாகங்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த வர்த்தகர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனால் ஜி.பி.சாலையின் அருகே உள்ள தெருக்களில் கார்கள் நிறுத்தப்பட்டு உதிரி பாகங்கள், ஸ்டிக்கர் ஒட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போக்குவரத்து மாற்றம் தொடர்ந்து நீடித்தால் தங்களது வியாபாரம் கடுமையான சரிவை சந்திக்கும் என வர்த்தகர்கள் கருத்து தெரிவித்தனர்.
ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு: அண்ணா சாலையில் அமல்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம் குறித்த அறிவிப்புகளை ஒலிபெருக்கி மூலம் போக்குவரத்து போலீஸார் பொது மக்களுக்கு அறிவித்து வருகின்றனர்.
போக்குவரத்து மாற்றம் குறித்து பொது மக்களின் குழப்பம் தீரும் வரையில் இம்முறையிலான அறிவிப்புகள் மூன்று மாதத்துக்கு தொடரும் என போலீஸார் தெரிவித்தனர்.