அண்ணா சாலை போக்குவரத்து மாற்றம்: ஜி.பி. சாலை வணிகம் பாதிப்பு
சென்னை, மார்ச் 20: சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட போக்குவரத்து மாற்றத்தின் காரணமாக ஜெனரல் பாட்டர்ஸ் சாலையில் இயங்கும் கடைகளின் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்
சென்னை, மார்ச் 20: சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட போக்குவரத்து மாற்றத்தின் காரணமாக ஜெனரல் பாட்டர்ஸ் சாலையில் இயங்கும் கடைகளின் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஜி.பி. சாலையில் உள்ள கார் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடைகளில் பணியாற்றும் 2500 தொழிலாளிகள் வேலை இழந்து தவிக்கின்றனர்.
சென்னை மெட்ரோ ரயில் சேவைக்காக அண்ணா சாலை எல்.ஐ.சி. அருகே சுரங்கம் அமைக்கும் பணிகளுக்காக கடந்த மார்ச் 3-ம் தேதி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
Advertisement
இந்த போக்குவரத்து மாற்றத்தின்படி, ஜி.பி.சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுவது தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜி.பி.சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு அண்ணா சாலை வெலிங்டன் சந்திப்பிலிருந்து வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது.
அண்ணா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ராயபேட்டை, ஜெமினி மேம்பாலம் ஆகியவற்றுக்கு செல்ல இப்போது ஜி.பி.சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இதன்காரணமாக ஜி.பி.சாலை முழுவதும் வாகனங்கள் நிறுத்தப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கார்களுக்கு உதிரி பாகங்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த வர்த்தகர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்தச் சாலையில் மட்டும் பெரிதும் சிறிதுமாக சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
கடைகள் வைத்திருக்கும் பெரும்பான்மையானவர்கள் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்கள்.
இவர்கள் இந்தச் சாலையில் தலைமுறை தலைமுறையாக கார் உதிரிபாகங்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்தச் சாலையில் கார்களுக்கான அலங்காரப்பொருள்கள், சன்பிலிம், பம்பர்கள், ரேடியோக்கள் சீட் கவர்கள் விற்பனை மற்றும் பொருத்தும் பணிகள் நடைபெறும்.
போக்குவரத்து மாற்றத்துக்கு முன்பாக ஜி.பி.சாலையின் இரு ஓரங்களிலும் கார்கள் நிறுத்தப்பட்டு உதிரிபாகங்கள் பொருத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும்.
இந்த வேலைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதால் ஜி.பி.சாலை வெறிச்சோடிக் காணப்படுகிறது.
தொழிலாளர்கள் பாதிப்பு: கார் உதிரிப்பாகங்கள் பொருத்தும் பணியில் இப்பகுதியில் சுமார் 2500 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இப்போது தொழிலாளர்களின் தினசரி வருமானம் பாதிப்படைந்துள்ளது.
ஒருநாளைக்கு குறைந்தபட்சம் ரூ.200 முதல் ரூ.1000 வரை கிடைக்கும் வருமானம் இப்போது முடங்கியுள்ளது. மேலும், இவர்களின் வருமானத்தை நம்பி இயங்கும் குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளது.
தீர்வு என்ன ?... போக்குவரத்து மாற்றத்தின் காரணமாக கடைகளின் வருமானம் 60 சதவீதம் குறைந்துள்ளதாக ஜி.பி.சாலை வணிகர்கள் தெரிவித்தனர்.
பொது மக்களின் நலனுக்காக வரவுள்ள மெட்ரோ ரயில் திட்டத்துக்காக இந்தப் போக்குவரத்து மாற்றம் என்பதால் இப்பகுதியில் உள்ள வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை.
எனினும் மெட்ராஸ் மோட்டார் பார்ட்ஸ் டீலர்ஸ் அசோசியேஷன் சார்பாக சென்னை காவல்துறையிடம் ஜி.பி.சாலை கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் கார்களை நிறுத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் கார்களை நிறுத்துவதற்கான அனுமதி விரைவில் வழங்க வேண்டும் அல்லது மாற்று யோசனையை காவல்துறை தெரிவிக்க வேண்டும் என்றார் வியாபாரி ஒருவர்.
ஆனால் ஜி.பி. சாலையில் நிபந்தனைகள் தளர்த்தபடவில்லை என்றால் இந்தத் தொழிலை நம்பி இயங்கும் வணிகரகள் மற்றும் தொழிலாளர்கள் நிலைமை கேள்விக்குறியாகும்.