எழும்பூர் ரயில் நிலையத்தில் கூடுதல் கவுன்ட்டர்கள் திறக்க கோரிக்கை
சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கூடுதல் டிக்கெட் கவுன்ட்டர்களை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ர
சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கூடுதல் டிக்கெட் கவுன்ட்டர்களை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களிலும், சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் ரயில்களிலும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால், இந்த ரயில் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
ஆனால், அதற்கேற்ப கூடுதல் டிக்கெட் கவுன்ட்டர்கள் இல்லை. இப்போது 9 டிக்கெட் கவுன்ட்டர்கள் மட்டுமே உள்ளன. மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோருக்காக ஒரு டிக்கெட் கவுன்ட்டர் திறக்கப்பட்டுள்ளது.
Advertisement
ரயிலைவிட பஸ் கட்டணம் அதிகமாக இருப்பதால், ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வாரநாள்களில் இப்போதுள்ள டிக்கெட் கவுன்ட்டர்களில் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட்டுகளை பெற வேண்டியுள்ளது. இதனால் பயணிகளுக்குத் தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க புறநகர் ரயில்களுக்கான டிக்கெட் கவுன்ட்டர்களை அதிகரிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆளில்லாத கவுன்ட்டர்கள்: எழும்பூர் ரயில் நிலையத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கான டிக்கெட் கவுன்ட்டரில் பெரும்பாலான நேரங்களில் ஊழியர்கள் இருப்பதில்லை என்று புகார் கூறப்படுகிறது. அதோடு, வார இறுதி நாள்களில் இந்த டிக்கெட் கவுன்ட்டர் மூடப்பட்டிருப்பதால், பொது கவுன்ட்டரில் டிக்கெட் வாங்குவதற்கு மாற்றுத் திறனாளிகளும், முதியோரும் சிரமப்படுகின்றனர்.
மயிலாப்பூர், பெரம்பூர்: திருமயிலை மற்றும் பெரம்பூர் ரயில் நிலையங்களிலும் கூடுதல் டிக்கெட் கவுன்ட்டர்களை திறக்க வேண்டும். பெரம்பூரில் பெரும்பாலும் 2 டிக்கெட் கவுன்ட்டர்கள் மட்டுமே இயங்குகின்றன.
அதேபோல, திருமயிலை ரயில் நிலையத்தில் தத்கல் முன்பதிவு நேரங்களில் ஒரு சில கவுன்ட்டர்களே இயங்குகின்றன.
இதனால் முன்பதிவு செய்வதில் சிரமம் ஏற்படுகிறது என்று பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.