முகப்பு
சென்னை

சென்னை மக்களுக்கு கை கொடுத்த மெட்ரோ ரயில்!

சென்னையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மாநகரப் பேருந்து, மின்சார ரயில்களின் சேவை வெகுவாகக் குறைக்கப்பட்டது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:42 AM
பகிர்:

சென்னையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மாநகரப் பேருந்து, மின்சார ரயில்களின் சேவை வெகுவாகக் குறைக்கப்பட்டது.
 அதே நேரத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடர்ந்து இயக்கப்பட்டதால், அதில் பயணிகள் கூட்டம் நிறைந்து வழிந்தது.
 ஆலந்தூர் - கோயம்பேடு இடையிலான மெட்ரோ ரயில் சேவை செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை ஆகிய இரண்டு தினங்களிலும் பரபரப்பாக காணப்பட்டது. இதனால் பகலிலும், இரவிலும் மெட்ரோ ரயில்கள் கூடுதலாக இயக்கப்பட்டன.
 பொதுவாக, இரவு 10 மணிக்கு மேல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதில்லை. ஆனால் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வரை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. மேலும், பொதுமக்கள் அதிகம் மெட்ரோ ரயில் சேவையை நாடியதால், புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கே மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
 அடையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அதன் குறுக்கே உள்ள 3 பாலங்கள் மூழ்கும் நிலையில் உள்ளன. இதனால், அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
 முக்கிய சாலைகளில் வெள்ளம்: ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரையிலான சாலைப் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டது. ஈக்காட்டுத்தாங்கல், அடையாறு கரையோரம் பாலத்தைத் தாண்டி வெள்ளம் சென்றதால், 100 அடிச் சாலையில் போக்குவரத்து முடங்கியது. இந்தச் சாலை வழித் தடத்தில் உள்ள இடங்களுக்குச் செல்ல மெட்ரோ ரயில் ஒன்றே தீர்வாக அமைந்தது.
 எனவே, ஆலந்தூரில் இருந்து ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வடபழனி, கோயம்பேடு உள்ளிட்ட முக்கிய இடங்களுக்குச் செல்ல மெட்ரோ ரயில் சேவையை பெரும்பாலானோர் பயன்படுத்தினர்.
 இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரி கூறியதாவது:
 ஆலந்தூர் - கோயம்பேடு இடையே மெட்ரோ ரயில் இயக்கத்துக்கு தினமும் செலவிடும் தொகையில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே கட்டண வசூல் பெற முடிகிறது. ஒட்டுமொத்த செலவில் மின்சார செலவு 50 சதவீதமாகும். இதுதவிர ஊழியர்கள் சம்பளம், பராமரிப்புப் பணிகள் ஆகியவையும் இருக்கின்றன.
 பொதுப் போக்குவரத்து பயன்பாடுகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஸ்மார்ட் அட்டை, சுற்றுலா அட்டைகளை அறிமுகப்படுத்தி உள்ளோம். எழும்பூர், பரங்கிமலை, விமான நிலையம், சென்ட்ரல் ஆகிய இடங்களை இணைக்கும்போது, மெட்ரோ ரயில்களில் அதிகளவில் கூட்டம் வரும் என நம்புகிறோம். ஆனால், இவையெல்லாம் நடப்பதற்கு முன்பாகவே பலத்த மழை, வெள்ளம் மெட்ரோ ரயிலின் சிறப்புகளை பொதுமக்களுக்கு உணர்த்திவிட்டது. பொதுமக்களின் துயரத்தைப் போக்கவே இப்போது 21 மணி நேரம் கூடுதல் ரயில்களோடு இயக்கப்பட்டு வருகின்றன என்றார்.
 கட்டணத்தைக் குறைப்பது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கபடவில்லை.
 இதுகுறித்து கோயம்பேட்டில் இருந்து ஈக்காட்டுத்தாங்கல் வரை மெட்ரோ ரயிலில் சென்ற பயணி தினேஷ் கூறியதாவது:
 சென்னை மெட்ரோ ரயிலில் கட்டணம் அதிகம் என்பதால் இதைப் பயன்படுத்தாமல் தவிர்த்து வந்தேன். இப்போது 100 அடி சாலையில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக, சென்னை மெட்ரோ ரயிலில் சென்றேன். இதுபோன்ற இயற்கைச் சீற்ற நேரங்களில் மெட்ரோ ரயில் சேவை உதவியாக இருக்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments