பெரு மழைக்குப் பிறகு சென்னையில் அதிகரித்த காற்று மாசு
சென்னையில் அண்மையில் பெய்த பெருமழைக்குப் பிறகு அதிகரித்த காற்று மாசு அளவு தற்போது படிப்படியாகக் குறைந்து வருகிறது.
சென்னையில் அண்மையில் பெய்த பெருமழைக்குப் பிறகு அதிகரித்த காற்று மாசு அளவு தற்போது படிப்படியாகக் குறைந்து வருகிறது.
சென்னையில் இந்தாண்டு வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மாநகரின் பல்வேறு சாலைகளில் மண் படிவுகளும், குண்டும் குழிகளும் ஏற்பட்டன. தற்போது வெள்ளம் வடிந்துவிட்டதால், சாலைகளில் படிந்த மண் உலர்ந்து, தூசு மண்டலமாக மாறியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
நியூ ஆவடி சாலை, திருமங்கலம் - கிண்டி வரையிலான 100 அடி சாலை, மாதவரம் வழியாகச் செல்லும் ஜிஎன்டி சாலை, ஜி.எஸ்.டி. சாலை எனப் பெரும்பாலான சாலைகள் தூசுகளால் நிரம்பியுள்ளன.
மாசு அளவு எவ்வளவு?: மாசுக் கட்டுப்பாட்டு வாரிய விதிகளின்படி காற்றில் மாசின் அளவு 60 மைக்ரோ கிராம் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், சென்னையில் வெள்ளம் வடிந்த பிறகு 10 நாள்களுக்கும் மேலாக அனுமதிக்கப்பட்ட அளவைவிட 5 மடங்கு காற்றில் மாசு இருந்து வந்தது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அளித்த தகவலின்படி மழைநீர் வடிந்த நிலையில், கடந்த 10 ஆம் தேதி அதிகபட்சமாக ஒரு கனமீட்டரில் 500 மைக்ரோகிராம் அளவுக்கு காற்று மாசு உயர்ந்தது.
அதைத் தொடர்ந்து வந்த நாள்களில் தினமும் அதாவது, கடந்த 18 ஆம் தேதி வரை சுமார் 300 முதல் 350 மைக்ரோகிராம் வரை காற்று மாசு பதிவானது. ஆனால், இப்போது வியாழக்கிழமை நிலவரப்படி, மாசின் அளவு குறைந்தது 162 மைக்ரோகிராம் எனப் பதிவாகியுள்ளது.
9 ஆண்டுகளாக அதிகரிக்கும் மாசு: சென்னையில் 2006 ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு பகுதிகளில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. அண்ணாநகர், அமைந்தகரை, புரசைவாக்கம், வள்ளலார்நகர், கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை, தியாகராயநகர், அடையாறு ஆகிய பகுதிகளில் காற்றில் கலந்திருக்கும் தூசு அளவை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
தியாகராயநகரில் இந்தாண்டு ஜனவரியில் அதிகபட்சமாக 141 என்ற அளவில் பிஎம்10 உள்ளது. பிஎம் 10 என்பது மாசின் அளவைக் கணக்கிடும் குறியீடு. இது 100 வரை இருக்கலாம்.
இதுகுறித்து மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அண்மையில் பெய்த பலத்த மழையால் சாலைகள் சேதமடைந்து, அதனால் காற்றின் மாசு அளவு அதிகரித்துள்ளது.
இதைத் தடுக்க அரசின் பல்வேறு துறைகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறோம். நகரத்தில் வாகனப் பெருக்கம் காரணமாக, அவை வெளியிடும் புகை மற்றும் அவை சாலையில் செல்லும்போது அதனால் ஏற்படும் தூசு காற்றில் பறந்து மாசு ஏற்படுகிறது. பொதுமக்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தினால் இந்தக் காற்று மாசைக் குறைக்கலாம். மேலும், மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை நிர்வாகம் சாலை அமைக்கும் போது, சாலையோரத்தில் மண் பகுதியை விடாமல் கடைசி வரை தார் போடுமாறு அறிவுறுத்தியுள்ளோம்.
மேலும், நகரில் அதிகரித்து வரும் கட்டுமானப் பணிகள் காரணமாகவும் காற்று மாசு அதிகரிக்கிறது. இதைக் குறைக்க கட்டுமான நிறுவனங்கள் தடுப்புகள், வலைகளை அமைத்து பணிகளைச் செய்ய வேண்டும். புழுதி பறக்காத வகையில் தரையில் அடிக்கடி நீர் தெளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளோம் என்றார் அவர்.