முகப்பு
சென்னை

ராயபுரம் ரயில் நிலையத்தை முனையமாக மாற்றுவதில் தீவிரம்

சென்னை ராயபுரம் ரயில் நிலையத்தை முனையமாக மாற்றுவதில் தெற்கு ரயில்வே தீவிரம் காட்டி வருகிறது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:54 AM
பகிர்:

சென்னை ராயபுரம் ரயில் நிலையத்தை முனையமாக மாற்றுவதில் தெற்கு ரயில்வே தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான முதல் முயற்சியாக, 2016-ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் முதல் கட்டப் பணிகளுக்கான நிதி ஒதுக்கப்படும் என தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 சென்னையில் பெய்த பலத்த மழையின் காரணமாக விரைவு ரயில் சேவைகள் 4 நாள்களுக்கும் மேலாகப் பாதிக்கப்பட்டன. சென்னையில் எழும்பூர், சென்ட்ரல் தவிர வேறு ரயில் முனையம் இல்லாததால், ரயில்களை முழுமையாக இயக்க முடியாமல் போனது. இதையடுத்து, சென்னை கடற்கரையில் இருந்து வெளி மாவட்டங்கள், பிற மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
 இதன் காரணமாக, எதிர்காலத்தில் இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக, தெற்கு ரயில்வே இப்போது ராயபுரம் ரயில் நிலையத்தை முனையமாக்கும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது.
 என்ன நடந்தது? 2012-2013 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில், சென்னை ராயபுரம் ரயில் நிலையம் 4-ஆவது ரயில் முனையமாகவும், தாம்பரம் ரயில் நிலையம் 3-ஆவது ரயில் முனையமாகவும் மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
 ஆனால், ராயபுரம் ரயில் நிலையத்தை முனையமாக மாற்ற எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
 மேலும், 2013-2014, 2015-2016 ஆம் ஆண்டுகளுக்கான ரயில்வே பட்ஜெட்டில் ராயபுரத்தை ரயில் முனையமாக மாற்றுவதற்கான எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.
 இந்நிலையில், தெற்கு ரயில்வே பொது மேலாளர் அண்மையில் நடத்திய உயர்நிலைக் கூட்டத்தில் ராயபுரம் ரயில் நிலையத்தை முனையமாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
 ராயபுரம் ரயில் நிலையம் அருகே இரண்டு மேம்பாலங்கள் உள்ளன. இவை ரயில் நிலையத்தில் இருந்து 500 மீட்டர் இடைவெளியில் உள்ளன. ராயபுரம் ரயில் நிலையத்தை முனையமாக அறிவிக்க வேண்டுமென்றால், குறைந்தபட்சம் மேம்பாலம் இடையே 1,200 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். மேலும், ராயபுரத்தில் மக்கள் அதிகளவில் வசிப்பதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
 முனையமாக்குவதற்குப் பதிலாக விரைவு ரயில்கள் சிறிது நேரம் நின்று செல்வதற்கு வசதி ஏற்படுத்தித் தரலாம் என்று கூறப்பட்டது. இப்போது ராயபுரம் ரயில் நிலையம் வழியாக 15 விரைவு ரயில்கள் சென்று கொண்டிருக்கின்றன.
 பழைமையான ரயில் நிலையம்: ஆங்கிலேயர்களால் 1856-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது ராயபுரம் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையம் நாட்டிலேயே 3-வது பழைமையான ரயில் நிலையமாகும்.
 ராயபுரம் ரயில் நிலையத்தை முனையமாக மாற்றுவதற்கு தமிழகத்தைச் சேர்ந்த 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2012-ஆம் ஆண்டு கையெழுத்திட்டனர். ரயில்வே துறையைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் குழு ராயபுரம் ரயில் நிலையத்தை 2012-ஆம் ஆண்டு, ஜனவரி 20-ஆம் தேதி ஆய்வு செய்தது.
 ராயபுரத்தில் அமைக்கப்பட்டு வரும் லோகோ ஷெட்டை மாநகரத்துக்கு வெளியே அமைக்க வேண்டும். அப்போதுதான் ராயபுரத்தை முனையமாக மாற்ற முடியும்.
 தென் மாவட்டங்களுக்கு தாம்பரத்தில் இருந்து ரயில்களை இயக்கக் கூடாது போன்ற கோரிக்கைகளை தமிழ்நாடு ரயில் பயணிகள் உரிமைகள் தீர்வகம் வலியுறுத்தியது.
 இதுகுறித்து தெற்கு ரயில்வே உயர் அதிகாரி கூறியதாவது: ராயபுரம் ரயில் நிலையத்தை முனையமாக மாற்றுவதற்கான முதல் கட்ட அறிக்கை தயார் நிலையில் உள்ளது. இந்த அறிக்கை இப்போது ரயில்வே அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் ராயபுரம் ரயில் நிலையத்தை முனையமாக மாற்றுவதற்கான முதல் கட்ட நிதியை எதிர்பார்க்கலாம் என்றார் அவர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments