முகப்பு
சென்னை

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமும் அதன் பயன்பாடும்!

தமிழகத்தில் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணையத்தில் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இப்போதுள்ள புதிய வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் என்றால் என்ன ? அவற்றின் பயன்பாடு என்ன ? எப்போது வாக்குப்பதிவு இயந்திரங்கள் நடைமுறைக்கு வந்தது என தெரிய வாய்ப்பில்லை.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:02 PM
பகிர்:

தமிழகத்தில் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணையத்தில் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இப்போதுள்ள புதிய வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் என்றால் என்ன ? அவற்றின் பயன்பாடு என்ன ? எப்போது வாக்குப்பதிவு இயந்திரங்கள் நடைமுறைக்கு வந்தது என தெரிய வாய்ப்பில்லை.

இந்தியாவில் 1982- ஆம் ஆண்டு, கேரள மாநிலம், பரூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் சில குறிப்பிட்ட வாக்குச் சாவடிகளில் இந்த இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. 50 வாக்குச் சாவடிகளில் இந்த இயந்திரம் பயன்படுத்தப்பட்டது அதுவே முதல் முறையாகும்.

தேர்தலில் பதிவான வாக்குச் சீட்டுக்களை எண்ணும் பணிக்கு நீண்ட நேரம் தேவைப்படுவதால், அந்தப் பெரிய இடைவெளி, வாக்கு எண்ணும் அலுவலர்கள், போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் ஆகியோருக்கு ஒரு பதற்றமான சூழ்நிலையை உருவாக்கி விடுகிறது. சில சமயங்களில் வாக்குகள் அதிகம் பெற்றுள்ள இரண்டு வேட்பாளர்களுக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்து, செல்லாத வாக்குகளும் சந்தேகத்திற்கு இடமான வாக்குகளும் அதிக அளவில் இருக்கவே வாக்குப்பதிவு இயந்திரங்கள் நடைமுறைக்கு வந்தன.

Advertisement

சிறப்பு அம்சங்கள் என்ன? இந்த இயந்திரத்தை வாக்குச்சாவடி அலுவலர்களும், வாக்காளர்களும் எளிதாக இயக்கலாம். பல்வேறு தட்ப வெட்ப நிலைகளிலும் கையாளுவதற்கு ஏற்றதாக இருக்கும் வகையில் இந்த இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

தனித்து இயங்கும் திறன் கொண்டதாக இருப்பதாலும், வலை இணைப்பு இல்லாமல் இருப்பதாலும், இதிலுள்ள மென்பொருளுக்கு யாரும் இடையூறு ஏற்படுத்த முடியாது. மேலும் தேர்தல் முடிவிலும் எவ்விதக் குழப்பமும் செய்யமுடியாது. நாட்டின் பல இடங்களில் மின் விநியோகம் சரியாக இருப்பதில்லை என்பதைக் கருத்தில் கொண்டு இந்த இயந்திரம் மின்கலம் (பேட்டரி) இணைப்புடனும் இயங்கத்தக்கவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்களை யார் தயாரிக்கிறார்கள்? இரண்டு மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களான பாரத் மின்னணு நிறுவனமும் (பெல்), இந்திய மின்னணுக் கழகமும் இந்த இயந்திரங்களைத் தயாரிக்கின்றன. இவற்றிடமிருந்து இந்தியத் தேர்தல் ஆணையம் இந்த இயந்திரத்தை வாங்குகிறது.

ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உயர்ந்த அளவாக 3,840 வாக்குகளைப் பதிவு செய்ய முடியும். இந்த எண்ணிக்கை ஒரு வாக்குச் சாவடிக்கான வாக்குகளைவிட மிக அதிகமாகும். வழக்கமாக 1,400-க்கும் குறைவான வாக்குகளே ஒரு சாவடியில் இருக்கும். அதேபோல ஒரு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 64-க்கும் மிகாமல் இருக்கும் வரை மின்னணு இயந்திரத்தைப் பயன்படுத்தி தேர்தலை நடத்த முடியும்.

-ஆர்.ஜி.ஜெகதீஷ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments