இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் பாதை திட்டத்தை பூந்தமல்லி வரை நீட்டிப்பதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டமாக ஜப்பான் நிதியுதவியுடன் மாதவரம் -சிறுசேரி வரை ரூ.85,000 கோடி செலவில் 107 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் மாதவரம்-சிறுசேரி, ஆயிரம் விளக்கு-வளசரவாக்கம், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை மெட்ரோ ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக மண் பரிசோதனை தொடங்கியுள்ளது. மேலும் இடம் கையகப்படுத்துவது தொடர்பான பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் திட்டப் பணிகள் தொடங்கப்படவுள்ளன.
பூந்தமல்லி வரை நீட்டிப்பு: இந்நிலையில், வளசரவாக்கம்-பூந்தமல்லி வரை மெட்ரோ ரயில் பாதை 13 கி.மீ. தூரத்துக்கு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. காரம்பாக்கம், போரூர் சந்திப்பு, ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை, ஐயப்பன்தாங்கல் டெப்போ, காட்டுப்பாக்கம், குமணன்சாவடி, கரையான்சாவடி, முல்லை தோட்டம், பூந்தமல்லி பைபாஸ் உள்பட 10 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.