சென்னையில் மீண்டும் "பீரோ புல்லிங்' திருட்டு
சென்னையில் மீண்டும் பீரோ புல்லிங் திருட்டு விருகம்பாக்கத்தில் நடைபெற்றுள்ளது.
சென்னையில் மீண்டும் பீரோ புல்லிங் திருட்டு விருகம்பாக்கத்தில் நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
விருகம்பாக்கம் நடேசன் நகரைச் சேர்ந்தவர் தேவகுமார் (47). இவர் கணினிகளை வாங்கி விற்பனை செய்து வருகிறார். கோடை விடுமுறையையொட்டி, இவரது குடும்பத்தினர் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர். இதனால் தேவகுமார் மட்டும் வீட்டில் இருந்தார்.
தேவகுமார் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவர் வீட்டின் மற்றொரு அறையில் இருந்த ஒரு பீரோவை சில மர்ம நபர்கள் ஜன்னல் வழியாக (பீரோ புல்லிங்) அருகே இழுத்து திறந்து, அதில் இருந்த 8 பவுன் தங்கநகைகளைத் திருடிச் சென்றனர். இதுகுறித்து விருகம்பாக்கம் குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு பீரோ புல்லிங் திருட்டு அதிகமாக நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் காவல்துறை, இந்த வகை திருட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்து, சிறையில் அடைத்ததால் பீரோ புல்லிங் திருட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், விருகம்பாக்கத்தில் மீண்டும் பீரோ புல்லிங் திருட்டு நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.