செம்பாக்கத்தில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் சாவு
சென்னை தாம்பரத்தை அடுத்த செம்பாக்கத்தில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்தார்.
சென்னை தாம்பரத்தை அடுத்த செம்பாக்கத்தில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்தார்.
செம்பாக்கம் நகராட்சி ரங்கா காலனியைச் சேர்ந்தவர் பிரின்ஸ் உதயசேகர் (61). இவர் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் லால்குடியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றார். அங்கு காய்ச்சல் அதிகரித்த நிலையில் மீண்டும் சென்னை வந்து திருமுல்லைவாயிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது அவர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. அதையடுத்து ஆபத்தானநிலையில் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, திங்கள்கிழமை உயிரிழந்தார்.
பிரின்ஸ் உதயகுமார் பன்றிக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த தகவல் கிடைத்த உடன் செம்பாக்கம் நகராட்சி ஊழியர்கள் ரங்கா காலனி பகுதியில் தீவிர சுகாதாரப் பணிகளை மேற்கொண்டனர். வீடுவீடாகச் சென்று சோதனை நடத்தி காய்ச்சல் தடுப்பு மாத்திரைகளை வழங்கினர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.