பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் இருந்து இரண்டு வாரத்தில் 80 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
பிளாஸ்டிக் பைகள், கப்புகள் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களைக் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் (ஜன.1) பயன்படுத்துதல், விற்பனை, உற்பத்திக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை, பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக வீடு, கடைகளில் உள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைச் சேகரிக்கும் வகையில் 15 மண்டலங்களில் உள்ள வார்டு அலுவலகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் ஆகியவற்றில் மாநகராட்சி சார்பில் கடந்த டிச. 31 முதல் சேகரிப்புத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
80 டன் சேகரிப்பு: இதில், முதல் நாளான திங்கள்கிழமை (டிச. 31) 2 டன், செவ்வாய்க்கிழமை (ஜன. 1 ) 2.50 டன், புதன்கிழமை (ஜன. 2) 8.50 டன், வியாழக்கிழமை (ஜன. 3) 10 டன் என திங்கள்கிழமையுடனான (ஜன.14) இரண்டு வாரத்தில் மட்டும் 80 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை வைத்திருப்போர் அவற்றை மாநகராட்சி வார்டு அலுவலகங்களில் வழங்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.