ரயில் பயணிகள் பாதுகாப்புக்காக சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் மகேஷ் தெரிவித்தார்.
சென்னையில் வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் அவர் கூறியது: கடற்கரை-தாம்பரம் இடையேயான புறநகர் விரைவு ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் தொடங்குகிறது. 11 விரைவு ரயில்கள் தற்போது 7 ஆக குறைக்கப்பட்டுள்ளன.
தேஜஸ் அதிவிரைவு ரயில், கொல்லம் விரைவு ரயில் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் தற்போது சீரமைக்கப்பட்ட பாதையில் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக, விரைவு ரயில்கள், மின்சார ரயில் சேவை குறைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 85 சதவீதம் ரயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்படுகின்றன. ரயில் தண்டவாள பராமரிப்புக்காகவே சில நேரங்களில் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. ரயில் பயணிகள் பாதுகாப்புக்காக சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகப்படியான பயணிகள் வந்து செல்வதால், வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் இனி புதிதாக வரும் அனைத்து ரயில்களிலும் 8 பெட்டிகள் இல்லாமல் 12 பெட்டிகளாக இயக்கப்படும். குறிப்பாக, பறக்கும் ரயில் சேவையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பயணிகளின் பாதுகாப்பு கருதி தானியங்கி கதவுகள் பொருத்துவதில் சற்று சிரமங்கள் இருக்கின்றன. ஆனாலும், இது குறித்து பரிசீலிக்கப்படும். மும்பையில் யு.டி.எஸ். செயலி ( முன்பதிவில்லாத டிக்கெட் எடுக்கும் செயலி) முறையில் 40 சதவீதம் பயணிகள் டிக்கெட் எடுத்து, பயணம் செய்கின்றனர். ஆனால், இங்கு குறைவாக உள்ளது. யு.டி.எஸ். செயலி மூலமாக டிக்கெட் எடுத்து பயணம் செய்திட பயணிகள் ஆர்வம் காட்ட வேண்டும் என்றார் கோட்ட ரயில்வே மேலாளர் மகேஷ்.