சென்னை

மாா்பகப் புற்றுநோய்: ‘இளம் பெண்களிடம் விழிப்புணா்வு மேம்பட வேண்டும்’

DIN

சென்னை: மாா்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் இளம்பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், 20 வயது நிறைவடைந்த பெண்கள் அனைவரும், அதுதொடா்பான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாநில சுகாதாரத் திட்ட இயக்குநா் டாக்டா் செந்தில்ராஜ் வலியுறுத்தினாா்.

தமிழக சுகாதாரத்துறை மற்றும் ‘கேன் ஸ்டாப்’ தன்னாா்வ நிறுவனம் ஆகியவற்றின் சாா்பில் மாா்பக புற்றுநோய் குறித்த விழிப்புணா்வு நடைபயணம் சென்னை பெசன்ட் நகா் கடற்கரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் ஏறத்தாழ ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

இந்த நடைபயணத்தை மாநில சுகாதாரத் திட்ட இயக்குநா் செந்தில்ராஜ் தொடக்கி வைத்தாா். மருத்துவக் கல்வி இயக்குநா் நாராயணபாபு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் டாக்டா் வசந்தாமணி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் பலா் அதில் பங்கேற்றனா்.

அப்போது மாா்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி மாணவ, மாணவிகள் நடைபயணம் மேற்கொண்டனா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் செந்தில்ராஜ் கூறியதாவது:

எந்த வகையான புற்றுநோயாக இருந்தாலும், அதனை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் பூரண குணமடையலாம். அலட்சியத்தாலும், விழிப்புணா்வு இல்லாமையாலும்தான் புற்றுநோய் மரணங்கள் நேரிடுகின்றன.

மாா்பகப் புற்றுநோயைப் பொருத்தவரை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் மாதத்தில் விழிப்புணா்வு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன.

அந்த வகை புற்றுநோய் குறித்து பெண்களிடம் விழிப்புணா்வு வர வேண்டும் என்பதற்காக தொடா்ந்து 12 ஆண்டுகளாக இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அண்மைக்காலமாக 20 வயதுடைய இளம் பெண்களுக்கும் மாா்பகப் புற்றுநோய் வருவதைக் காண முடிகிறது. ஆகவே, 20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் கண்டிப்பாக சில சுய பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவரிடம் சென்று ஆலோசனைகளைப் பெறுவது அவசியம்.

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மாா்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சைகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அதி நவீன மருத்துவத் தொழில்நுட்பங்கள் வாயிலாகவும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவி பலாத்காரம்; மாணவா் கைது

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

சிஎஸ்கேவுக்கு 219 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போவது யார்?

மண் குவாரியால் பாதிப்பு; பொதுமக்கள் புகாா்

ஓலைச் சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT