சொத்து விவகாரத்தில் பெற்ற தாயை காலணியால் அடித்த மகன் முதியோர் இல்லத்துக்கு ரூ.10 ஆயிரம் செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், சலவன்பேட்டையைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி ஸ்ரீலதா. வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் இவர் அளித்த புகாரில், "சொத்துகளை பிரித்து தரக் கோரி எனது மூத்த மகன் ஸ்ரீதர் மற்றும் அவனது மனைவி காயத்ரி ஆகியோர் என்னுடன் சண்டை போட்டதோடு, தகாத வார்த்தைகளால் திட்டினர். இதனையடுத்து எனது இளைய மகனை செல்லிடப்பேசியில் தொடர்புகொள்ள முயற்சித்தேன். அப்போது செல்லிடப்பேசியைத் தட்டி விட்ட எனது மூத்த மகன் என்னை காலணியால் அடித்தான்.
அவனது மனைவியும் என்னை தாக்கியதோடு என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகக் கூறியிருந்தார். இந்த புகார் குறித்து பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வேலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி ஸ்ரீதரும், அவரது மனைவி காயத்ரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞர் டி.சண்முகராஜேஸ்வரன், "பெற்ற தாயை அதுவும் வயதானவரை காலணியால் தாக்கியுள்ளார். எனவே அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது எனக்கோரி வாதிட்டார்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் முதியோர் இல்லத்துக்கு வரும் அக்டோபர் 4-ஆம் தேதிக்குள் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.
மேலும் மனுதாரர்கள் இருவரும் வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஜாமீன் உத்தரவாதம் கொடுத்து முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் மதுரையில் இரண்டு வாரங்கள் தங்கியிருந்து அங்குள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்' என்ற நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.