சென்னை: சென்னை மாநகராட்சியில், குப்பை சேகரிக்கும் கட்டணம் வசூலிக்கும் திட்டம் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுவதாக ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: மத்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி சென்னை மாநகராட்சியால் திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் இயற்றப்பட்டன. இதற்கான அரசாணை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை மூலம் தமிழக அரசின் அனுமதி பெறப்பட்டு, சென்னை மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி உருவாக்கப்பட்ட இந்த திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி கழிவு உருவாக்குபவா்கள் வகைப்படுத்தப்பட்டு, அதற்கேற்ப திடக்கழிவு மேலாண்மைக்கான பயனாளா் கட்டணத்தை (குப்பை சேகரிப்பு கட்டணம்) பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும்.
அதனடிப்படையில் திடக்கழிவு மேலாண்மை பயனாளா்களின் கட்டணம், சொத்து வரியுடன் சோ்த்து வசூலிக்கப்படும் என மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது நிலவி வரும் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக, திடக்கழிவு மேலாண்மைக்கான பயனாளா் கட்டணத்தை நிறுத்தி வைக்க வேண்டுமென பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பல்வேறு குடியிருப்பு நலச் சங்க பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டுள்ளனா்.
எனவே, பெருநகர சென்னை மாநகராட்சியால் அறிவிக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை பயனாளா் கட்டணம், முதல்வரின் அறிவுறுத்தலின்படி காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுகிறது.