நோயாளிகளின் குறைகளைத் தீர்க்கும் வகையில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் குறைதீர் மையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் தமிழ்நாடு பிரிவு மாநிலத் தலைவர் மருத்துவர் சி.என்.ராஜா தெரிவித்தார்.
இது குறித்து, சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும் அவர் கூறியது: இந்திய மருத்துவர் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு சார்பில் மருத்துவம் தொடர்பான வழக்குகளை எதிர்கொள்வது மற்றும் தடுப்பது தொடர்பாக மருத்துவர்களுக்கான சட்டக் கருத்தரங்கம் சென்னை. தேனாம்பேட்டையில் உள்ள ஹையாத் ரீஜென்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
இந்தக் கருத்தரங்கில், தேசிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத் தலைவர் நீதிபதி ஆர்.கே. அகர்வால், தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத் தலைவர் தமிழ்வாணன், நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத், மருத்துவர்கள் அன்பரசு, என்.முத்துராஜன், எஸ்.கனகசபாபதி, கே.தங்கமுத்து, எஸ்.நேரு, இ.குமரேசன் ஆகியோர் கலந்துகொண்டு மருத்துவம் தொடர்பான சட்டங்களை விளக்கிப் பேசவுள்ளனர்.
மேலும், நோயாளிகளின் குறைகளைத் தீர்க்கும் வகையில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மாவட்ட வாரியாக குறைதீர் மையம் அமைப்பது குறித்தும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீதான தாக்குதல்களைத் தடுக்கும் வகையில் காவல் துறையுடன் இணைந்து செல்லிடப்பேசி செயலியை உருவாக்குவது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது என மருத்துவர் சி.என்.ராஜா தெரிவித்தார்.