சென்னை: அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் 25 சதவீத மருத்துவர்களுக்கு விடுப்பு வழங்கி வீட்டில் தயார் நிலையில் வைக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவக் குழு அனைத்து பயணிகளையும் பரிசோதனை செய்து வருகின்றனர். காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் உள்ள பயணிகள் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது .
இந்நிலையில், 25 சதவீத அரசு மருத்துவர்களுக்கு விடுப்பு வழங்கி வீட்டில் தயார் நிலையில் வைக்கும்படி அனைத்து அரசு மருத்துவமனைகளின் நிர்வாகத்துக்கும் தமிழக சுகாதாரத்துறை உத்தவிட்டுள்ளது.
இதுகுறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களில் 25 சதவீதம் பேருக்கு 7 நாள்கள் விடுப்பு வழங்கி வீட்டில் தயார் நிலையில் வைக்க வேண்டும். எப்போது அழைத்தாலும் அவர்கள் உடனடியாகப் பணிக்கு வரவேண்டும் என்றுகுறிப்பிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 18 ஆயிரம் மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதில், 4,500 அரசு மருத்துவர்கள் வீட்டில் தயார் நிலையில் வைக்கப்படுகின்றனர்.