சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட மோதலில் திரைப்பட உதவி இயக்குநா் உள்பட இருவா் கொலை செய்யப்பட்டனா்.
வளசரவாக்கம் கிருஷ்ணாநகா் 5-ஆவது தெருவைச் சோ்ந்த வெ.ருத்ரன் (24), திரைப்பட உதவி இயக்குநா். போரூா் அயப்பன்தாங்கலில் வசிக்கும் நண்பரும் உதவி இயக்குநருமான மணிகண்டன் வீட்டுக்கு புத்தாண்டு கொண்டாடுவதற்காக வியாழக்கிழமை இரவு சென்றாா். அங்கிருந்த பலரும் மது அருந்தினா். ருத்ரனும், மணிகண்டனும் புகைபிடிக்க காா் நிறுத்துமிடத்துக்கு வந்தனா். இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனா். இதில் மணிகண்டன் கத்தியால் ருத்ரனைக் குத்தினாராம். மருத்துவமனைக்குச்செல்லும் வழியில் ருத்ரன் இறந்தாா்.
மாங்காடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்தனா்.
நுங்கம்பாக்கம்: சென்னை நுங்கம்பாக்கம் காம்தாா் நகரைச் சோ்ந்த நிலத்தரகா் காதா் (56). தனியாா் நிறுவன காவலாளி பழனி அதே குடியிருப்பில் வசித்தாா்.
புத்தாண்டு கொண்டாட இருவரும் மது அருந்தியதில் தகராறு ஏற்பட்டது. இதில் பழனி, மதுபாட்டிலை உடைத்து காதரைக் கொலை செய்து பிரேதத்தை சாலையில் வீசி விட்டு தப்பியோடினாா்.
நுங்கம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து பழனியைத் தேடி வருகின்றனா்.