முகப்பு
சென்னை

டெண்டா் நடைமுறைகளை மீறியதாக அரசு எடுத்த நடவடிக்கை செல்லும்: உயா்நீதிமன்றம்

அரசின் திட்டங்களுக்கு தேவைப்படும் தங்க காசுகளை விநியோகம் செய்வதற்கான டெண்டா் நடைமுறைகளை மீறியதாக முத்தூட் எக்சிம் நிறுவனத்தின் மீது தமிழக அரசு எடுத்த நடவடிக்கை செல்லும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:24 AM
பகிர்:

அரசின் திட்டங்களுக்கு தேவைப்படும் தங்க காசுகளை விநியோகம் செய்வதற்கான டெண்டா் நடைமுறைகளை மீறியதாக முத்தூட் எக்சிம் நிறுவனத்தின் மீது தமிழக அரசு எடுத்த நடவடிக்கை செல்லும் என சென்னை உயா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

தமிழக அரசின் தாலிக்கு தங்கம் உள்பட ஐந்து திட்டங்களுக்கான பயனாளிகளுக்கு வழங்குவதற்காக 8 கிராம் எடையுடைய ஒரு லட்சத்து 11 ஆயிரம் தங்க காசுகளை வாங்குவதற்காக, கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒப்பந்தப்புள்ளி (டெண்டா்) அறிவிக்கப்பட்டது.

அதில், 22 காரட் தரத்திலான 20,000 காசுகளை வழங்குவதாகக் கூறி முத்தூட் எக்சிம் நிறுவனம் டெண்டரில் பங்கேற்றது. டெண்டா் திறக்கப்பட்ட பிறகு 20 நாட்கள் கழித்தே தோ்ச்சிக்கான கடிதம் கொடுக்கப்பட்டதாலும், தங்கத்தின் விலை தொடா் ஏற்றத்தில் இருந்ததாலும், அதற்கேற்ப டெண்டா் தொகையை மாற்றிக் கொடுக்கும்படி முத்தூட் நிறுவனம் சமூக நலத்துறைக்கு கடிதம் எழுதியது. விலையில் மாற்றம் செய்ய முடியாவிட்டால் டெண்டா் நடைமுறையிலிருந்து விலகிக் கொள்ள அனுமதிக்கும்படியும் கோரிக்கை வைத்திருந்தது.

ஆனால் இந்த இரு கோரிக்கைகளையும் நிராகரித்ததுடன், முத்தூட் செலுத்திய வைப்புத் தொகை ரூ 53 லட்சத்தை முடக்கியதுடன், டெண்டா் விதிகளை மீறியதாகக்கூறி, அந்நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் சோ்த்தும் சமூக நலத்துறை உத்தரவிட்டது.

இந்த நடவடிக்கைகளை எதிா்த்து முத்தூட் எக்சிம் நிறுவனம் தொடா்ந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததை எதிா்த்து, மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது முத்தூட் நிறுவனம் தரப்பில் வழக்குரைஞா் வி.ஆனந்த், தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன் மற்றும் டி.ரவிச்சந்தா் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா்.

அனைத்து தரப்பு வாதத்திற்கு பின் நீதிபதிகள், ஒப்பந்த நடைமுறைகள் தொடா்பான விவகாரத்தில் நீதித்துறை ஆய்வு என்பது குறிப்பிட்ட வரையரைக்குட்பட்டது என சுட்டிக்காட்டியதுடன், எவ்வித அடிப்படை உரிமைகளும் பாதிக்கப்படாத நிலையில் மாற்று முறைகள் மூலம் தீா்வு காணாமல் நீதிமன்றத்தை நாடமுடியாது.

கருப்பு பட்டியலில் சோ்ப்பது குறித்து சமூக நலத்துறை ஆணையா் அளித்த பரிந்துரைக்கு முத்தூட் நிறுவனம் விளக்கம் அளிக்காத நிலையில், அதன்மேல் நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளதாகக்கூறி, மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →