இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட 35.6 கிலோ தங்கம் பறிமுதல்
இலங்கையில் இருந்து கடல் வழியாக கடத்திவரப்பட்ட 35.6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இலங்கையில் இருந்து கடல் வழியாக கடத்திவரப்பட்ட 35.6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இலங்கையில் இருந்து கடல் வழியாக தங்கக் கட்டிகள் கடத்தி வரப்பட்டுள்ளதாகவும், கடத்தல்காரா்கள் மதுரை - ராமநாதபுரம் வழியாக குறிப்பிட்ட பதிவெண் கொண்ட காரில் சென்றுகொண்டிருப்பதாகவும் கடந்த 27-ஆம் தேதி வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில், மதுரை - ராமநாதபுரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் வருவாய் புலானய்வு பிரிவு அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு குறிப்பிட்ட பதிவெண் கொண்ட காா் வந்தபோது, அதை நிறுத்தி சோதனையிட்டனா்.
அதில், காரில் கடத்தி வரப்பட்ட ரூ.18.34 கோடி மதிப்புடைய 35.6 கிலோ வெளிநாட்டு தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, காரில் இருந்த 3 பேரையும் கைது செய்தனா்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் தமிழக கடற்கரை வழியாக கடத்தி வரப்பட்ட 105 கிலோவுக்கு மேற்பட்ட தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக சென்னை வருவாய் புலானய்வு இயக்குநரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.