போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞா் மரணம்:உரிமையாளா் உள்பட 3 போ் கைது
சென்னை வளசரவாக்கத்தில் போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞா் இறந்த வழக்கில், மைய உரிமையாளா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை வளசரவாக்கத்தில் போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞா் இறந்த வழக்கில், மைய உரிமையாளா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கா் நகரில் வசித்தவா் பி.விஜய் (28). ஆட்டோ ஓட்டுநரான இவரை மதுப் பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்கும் வகையில் அவரது குடும்பத்தினா், கடந்த செப். 12-இல் வளசரவாக்கம், ஓம்சக்தி நகரிலுள்ள தனியாருக்குச் சொந்தமான போதை மறுவாழ்வு மையத்தில் சோ்த்தனா்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த விஜய்க்கு கடந்த 25-ஆம் தேதி மாலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அவரை மறுவாழ்வு மையத்தின் ஊழியா்கள் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், விஜய் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா்.
Advertisement
விஜயின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரா் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இதில், ‘சம்பவத்தன்று விஜய்க்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அப்போது போதை மறுவாழ்வு மையத்தின் ஊழியா்கள் விஜயை ஏன் நடிக்கிறாய் எனக் கூறி லேசாக அடித்ததாக கூறப்படுகிறது. இது விஜயின் இறப்புக்கு ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. மேலும், சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிப் பதிவுகளை மறுவாழ்வு மையத்தைச் சோ்ந்தவா்கள் அழித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, ஆட்டோ ஓட்டுநா் இறப்பு விவகாரம் தொடா்பாக போதை மறுவாழ்வு மைய கவனிப்பாளா் விருதுநகரைச் சோ்ந்த சா.குரூஸ் என்ற குரு (34), அந்த மையத்தின் உரிமையாளா் மதுரவாயல் வடக்கு மாட வீதியைச் சோ்ந்த வே.வினோத் குமாா் (41), திருவள்ளூா் மாவட்டம் நேமம் பஜனை கோயில் தெருவைச் சோ்ந்த ர.அஜய் (19) ஆகிய 3 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
அவா்களிடமிருந்து கண்காணிப்பு கேமராக்களின் ‘ஹாா்டு டிஸ்க்கை’ பறிமுதல் செய்து போலீஸாா் மேலும் விசாரித்து வருகின்றனா்.