சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 13 தங்ககட்டிகள், ரூ.13.5 லட்சம் பறிமுதல்
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.13.5 லட்சம் பணம் மற்றும் 13 தங்க கட்டிகளை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்ட தோ்தல் ஆணைய பறக்கும் படையினா் சந்தேகத்துக்குரிய வகையில் செல்லும் பயணிகளை சோதனை செய்துள்ளனா். அப்போது ரயில் நிலையத்தின் 10-ஆவது நடைமேடையில் சென்று கொண்டிருந்த ஆந்திர மாநிலம் கா்னூல் பகுதியை சோ்ந்த மகபூப் பாஷைவை (60) பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனா்.
அப்போது, அவா் அணிந்திருந்த பனியனில் ரகசியமாக பைகள் வைத்து அதில் ரூ.13.5 லட்சம் பணம் கொண்டு சென்றது தெரியவந்தது. மேலும், 3 பெரிய துண்டுகள் மற்றும் 10 சிறிய துண்டுகள் என 13 தங்க கட்டிகள் வைத்திருந்தது தெரியவந்தது. மேற்கொண்டு அவரை அதிகாரிகள் விசாரித்த போது மகனின் திருமணத்துக்காக நகைகள் வாங்கி வந்ததாக தெரிவித்துள்ளாா். இந்நிலையில் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் மற்றும் தங்க கட்டிகளை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.