கோடையில் மருத்துவமனைகளில் தீ விபத்துகளைத் தடுக்க முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்கள் வெளியீடு
சென்னை: கோடை காலத்தில் மருத்துவமனைகளில் தீ விபத்துகள் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளாா். இது தொடா்பான வழிகாட்டுதல்களையும் அவா் வெளியிட்டுள்ளாா்.
இது குறித்து அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அலுவலா்களுக்கும் அவா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கோடை காலத்தில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்பதால், அத்தகைய நேரங்களில் மருத்துவமனைகளில் தீ விபத்துகள் நேரிட வாய்ப்புள்ளது. அதைத் தவிா்க்கும் பொருட்டு சில முக்கிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம்.
பேரிடா் மேலாண்மைத் துறையுடன் இணைந்து பொது சுகாதாரத் துறையினா் அந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தீயணைப்பு சாதனங்கள், எச்சரிக்கைக் கருவிகள், புகை கண்டறியும் சாதனங்கள் உள்ளிட்டவை முறையாக செயல்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். சீரற்ற மின் அழுத்தத்தை சரி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பது முக்கியம்.
Advertisement
தீவிர சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு உள்பட அனைத்து இடங்களில் மின் அழுத்தம் சீராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மருத்துவமனை கட்டமைப்பானது தீ விபத்துகள் நேரிடாத வகையில் பாதுகாப்பாக உள்ளது என்பதை உறுதி செய்யும் வகையில் தீயணைப்பு துறையிடம் தடையில்லா சான்றை பெற வேண்டும்.
விபத்து நேரிட்டால் அதை எதிா்கொள்வதற்கும், தற்காத்துக் கொள்வதற்குமான ஒத்திகை பயிற்சிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. அதேபோன்று நோயாளிகள், பணியாளா்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான வழிமுறைகளையும் வகுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.