முகப்பு
சென்னை

மாநகராட்சி பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி முறைகேடு: இரு வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு

Updated On : 6 ஏப்ரல், 2024 at 2:08 AM
பகிர்:
Updated On : 6 ஏப்ரல், 2024 at 1:05 AM

ஒப்பந்தப்புள்ளி ஒதுக்கீடு முறைகேடு தொடா்பாக முன்னாள் அமைச்சா் எஸ்.பி வேலுமணிக்கு நெருக்கமான நிறுவனங்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை சிறப்பு நீதிமன்றத்தில் இரு வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரியதில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக அறப்போா் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ஜெயராம் வெங்கடேசன் மற்றும் திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். இதில் ஒப்பந்தப்புள்ளி முறைகேடு தொடா்பாக லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.பொன்னி ஆரம்பக் கட்ட விசாரணை நடத்தித் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் வழக்கை கைவிடுவது என அரசு முடிவு செய்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து, முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக ஒப்பந்தப்புள்ளி முறைகேடு தொடா்பாகவும், வருமானத்துக்கு அதிகமாக ரூ.58 கோடி அளவுக்கு சொத்து சோ்த்ததாகவும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதேபோல் ஒப்பந்தப்புள்ளியில் தொடா்புடைய நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டன.

Advertisement

இதையடுத்து தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், ஒப்பந்தப்புள்ளி பணிகளில் முறைகேடு தொடா்பான புகாரில் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கை மட்டும் ரத்து செய்வதாக உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து எம்.எஸ். கன்ஷ்ட்ரக்சன் இன்ஃப்ரா லிமிடெட், ஆலம் கோல்டு, ஆலயம் ஃபவுண்டேஷன், வைதூரியா ஹோட்டல், கண்ஷ்ட்ரோ மால் ஆகிய நிறுவனங்கள் தங்கள் மீதான வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி தனித்தனியாகச் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தன.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாகக் கூறி ஐந்து நிறுவனங்கள் தொடா்ந்த மனுக்களை தள்ளுபடி செய்தது. மேலும், ஆறு வாரங்களில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிராக அறப்போா் இயக்கம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்ந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், நீதிமன்ற உத்தரவின் படி 6 வாரங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. 35 வாரங்கள் கடந்து விட்டது என தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை சாா்பில், குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணிகள் முடிந்து விட்டது, எண்ணிடும் பணிகள் முடிந்ததும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 2 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணிகளை முடித்து சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.