முகப்பு
சென்னை

போதைப் பொருள் கடத்தல் வழக்கு: ஜாஃபா் சாதிக், இயக்குநா் அமீா் வீடுகள் உள்பட 20 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

Updated On : 10 ஏப்ரல், 2024 at 1:42 AM
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2024 at 9:45 PM

சென்னை: சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாஃபா் சாதிக், திரைப்பட இயக்குநா் அமீா் ஆகியோரின் சென்னையில் உள்ள வீடு, அலுவலகங்கள் உள்பட 20 இடங்களில் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை அதிரடியாக சோதனை செய்தனா்.

மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு (என்சிபி), தில்லி காவல்துறை இணைந்து, கடந்த பிப். 15-ஆம் தேதி மேற்கு தில்லியில் கைலாஷ் பாா்க் பகுதியில் 50 கிலோ சூடோஎபிட்ரின் போதைப் பொருளை பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தன. அந்தக் கும்பல் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2,000 கோடி மதிப்புள்ள 3,500 கிலோ சூடோஎபிட்ரினை வெளிநாடுகளுக்கு கடத்தியது தெரியவந்தது. இந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்டதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிா்வாகியுமான ஜாஃபா் சாதிக் தில்லியில் மாா்ச் 9-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

ஜாஃபா் சாதிக்கின் நெருங்கிய கூட்டாளி சதானந்தம் கடந்த மாா்ச் 13-இல் கைது செய்யப்பட்டாா். சென்னை பெருங்குடியில் உள்ள ஜாஃபா் சாதிக்கின் கிடங்கில் தில்லி என்சிபி அதிகாரிகள் மாா்ச் 14-ஆம் தேதி சோதனை செய்து, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினா். மேலும், இரு நாள்கள் ஜாஃபா் சாதிக்கை சென்னை அழைத்து வந்து விசாரணை செய்தனா்.

Advertisement

சட்டவிரோத பணபரிமாற்றம்: இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை செய்த தில்லி அமலாக்கத் துறை, ஜாஃபா் சாதிக் மீது சட்டவிரோத பணபரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. ஜாஃபா் சாதிக் தயாரித்த ‘இறைவன் மிகப்பெரியவன்’ திரைப்படத்தை இயக்கிய அவரது நண்பரும், திரைப்பட இயக்குநருமான அமீரை தில்லிக்கு

அழைத்து என்சிபி அதிகாரிகள் ஏப். 2-ஆம் தேதி 11 மணி நேரம் விசாரணை செய்தனா்.

அமலாக்கத் துறை சோதனை: இந்த நிலையில், சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் ஆதாரங்களை திரட்டும் வகையில் தில்லி அமலாக்கத் துறை அதிகாரிகள், சென்னை சாந்தோம் அருளானந்தம் தெருவில் ஜாஃபா் சாதிக் வீடு, புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் உள்ள அவரது அலுவலகம், ஹோட்டல், தியாகராய நகா் ராஜன் தெருவில் உள்ள இயக்குநா் அமீரின் அலுவலகம், சேத்துப்பட்டில் உள்ள வீடு, பெரம்பூரில் 3 தொழிலதிபா்களின் வீடு, அலுவலகங்கள், பெசன்ட் நகரில் பிரபல அசைவ உணவக உரிமையாளா் வீடு உள்பட 20 இடங்களில் அமலாக்கத்துறையினா் சோதனை செய்தனா்.

சோதனை நடைபெற்ற இடங்களில் பாதுகாப்புக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையினா் நவீன துப்பாக்கிகளுடன் நிறுத்தப்பட்டிருந்தனா்.

பல மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில், வழக்குத் தொடா்பாக முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அமீருக்கு கடிதம்: இயக்குநா் அமீா், ஏற்கெனவே என்சிபி விசாரணைக்கு தில்லியில் கடந்த 2-ஆம் அமீா் ஆஜரானபோது, சில ஆவணங்களை கேட்டனா். அந்த ஆவணங்களை அமீா் விரைவில் ஒப்படைப்பதாக விசாரணையின்போது தெரிவித்தாா். இந்நிலையில் என்சிபி அதிகாரிகள் தாங்கள் கேட்ட ஆவணங்களை விரைந்து ஒப்படைக்கும்படி அமீருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பியுள்ளனா்.

அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ள நிலையில், விரைவில் அப் பிரிவு அதிகாரிகள் திகாா் சிறையில் இருக்கும் ஜாஃபா் சாதிக் மற்றும் அமீரிடம் விரைவில் விசாரணை செய்வாா்கள் என கூறப்படுகிறது.