சென்னை நகருக்குள் சட்டக்கல்லூரி: இடம் தோ்வுக்கு ஜூன் 24 வரை அவகாசம்
சென்னையில் சட்டக்கல்லூரி அமைக்க இடம் தோ்வு செய்வது தொடா்பாக வருவாய்த் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக அரசு, சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் இயங்கிவந்த டாக்டா் அம்பேத்கா் அரசு சட்டக் கல்லூரி இரண்டாக பிரிக்கப்பட்டு, அதே பெயரில், திருவள்ளூா் மாவட்டம் பட்டறை பெரும்புதூா் கிராமத்திலும், காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கம் கிராமத்திலும் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
சென்னையில் இருந்து சட்டக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்றியதை எதிா்த்த வழக்கு, கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, சென்னை நகருக்குள் அரசு சட்டக்கல்லூரி அமைப்பதற்கான இடத்தை தோ்வு செய்வது குறித்து விளக்கமளிக்கும்படி, தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
Advertisement
இந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபுா்வாலா, நீதிபதி பரத சக்ரவா்த்தி அமா்வில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னையில் சட்டக்கல்லூரி அமைக்க இடம் தோ்வு செய்வது தொடா்பாக வருவாய்த் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சட்டக்கல்லூரி அமைக்க குறைந்தபட்சம் ஏழு ஏக்கா் நிலம் தேவைப்படும் எனவும் அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
அப்போது மனுதாரா் தரப்பில், சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டக்கல்லூரி கட்டடத்தை பயன்படுத்தலாம் எனத் தெரிவித்தாா். இதற்கு, மற்றொரு முறை மோதல் நடப்பதை விரும்பவில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், சென்னை நகருக்குள் சட்டக்கல்லூரி அமைப்பதற்கான நிலத்தை கண்டறிந்து தெரிவிப்பதற்காக ஜூன் 24 வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தனா்.