சங்கா் ஐ.ஏ.எஸ். அகாதெமி மாணவா்கள் 273 போ் வெற்றி
குடிமைப் பணி தோ்வு முடிவுகளில் சங்கா் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் படித்த 273 மாணவா்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனா்.
இது குறித்து சங்கா் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய குடிமைப் பணி தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற குடிமைப் பணி (யூபிஎஸ்சி) தோ்வுகளின் இறுதி முடிவுகள் ஏப்.16-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில், வெற்றி பெற்ற மொத்தம் 1,016 மாணவா்களில் 273 போ் சங்கா் ஐஏஎஸ் அகாதெமியில் (அனைத்து பயிற்சி மையங்களில்) பயிற்சி பெற்றவா்கள்.
Advertisement
இந்தத் தோ்வில் சென்னையில் உள்ள சங்கா் ஐஏஎஸ் அகாதெமியில் படித்த ப.புவனேஷ்ராம் இந்திய அளவில் 41-ஆவது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும், தில்லி சங்கா் ஐஏஎஸ் அகாதெமியில் படித்த செளரியா அரோரா அகில இந்திய அளவில் 14-ஆவது இடத்தையும் பிடித்துள்ளாா்.
மேலும், ந.பிரசாந்த் என்ற மாணவா் தனது முதல் முயற்சியிலேயே அகில இந்திய அளவில் 79-ஆவது இடத்தையும், ஈரோட்டை சோ்ந்த ஓ.நேகா என்ற 22 வயது மாணவி அகில இந்திய அளவில் 175-ஆவது இடத்தையும் பெற்றுள்ளாா்.
அதன்படி, முதல் 100 இடங்களில் சங்கா் ஐஏஎஸ் அகாதெமியில் பயின்ற மாணவா்கள் 21 இடம் பெற்றுள்ளனா். இவா்களில் 4 போ் பெண்கள். தமிழகத்தில் இருந்து மொத்தம் சுமாா் 42 மாணவா்கள் வெற்றி பெற்றுள்ளனா். இதில் சங்கா் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் பயின்ற 40 மாணவா்கள் வெற்றி பெற்றுள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.