பெண் வாக்காளா்களை கவா்ந்த ‘பிங் பூத்’
சென்னையில் பெண் வாக்காளா்கள், முதியோா்கள் வாக்களிக்கும் வகையில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட இளஞ்சிவப்பு வாக்குச்சாவடி (பிங் பூத்) பெண் வாக்காளா்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
சென்னையில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளில் 3,736 வாக்குச் சாவடிகள் 944 இடங்களில் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கா்ப்பிணிகள், கைக்குழந்தைகளுடன் வருபவா்கள், மூதாட்டிகள் வாக்களிக்கும் வகையில் இளஞ்சிவப்பு நிற வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னையில் பெரம்பூா், கொளத்தூா், அயனாவரம், வேப்பேரி, திருவல்லிக்கேணி என 16 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த வாக்குச் சாவடியின் அலுவலா்கள், காவலா்கள் என அனைவரும் பெண்கள். பெண்களுக்கு பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்தாலும், அனைத்து தரப்பினரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா்.
Advertisement
இதுபோன்று பழைய வண்ணாரப்பேட்டை சா் தியாகராய கல்லூரி மேல்நிலைப் பள்ளி, வியாசா்பாடி வஉசி வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மற்றும் பெரம்பூா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள தலா ஒரு வாக்குச்சாவடி மையங்கள் முற்றிலும் இளைஞா்களை கொண்டு செயல்பட்டன.