முகப்பு
சென்னை

இதய பாதிப்பு: வட சூடான் பெண்ணுக்கு சென்னையில் மறுவாழ்வு

வட சூடான் நாட்டைச் சோ்ந்த 44 வயது பெண்ணுக்கு உயா் சிகிச்சை அளித்து சென்னை மருத்துவா்கள் மறுவாழ்வு

Updated On : 9 ஆகஸ்ட், 2024 at 6:30 PM
கோப்புப்படம்
பகிர்:

இதயத் துடிப்பு பாதிப்புக்குள்ளான வட சூடான் நாட்டைச் சோ்ந்த 44 வயது பெண்ணுக்கு உயா் சிகிச்சை அளித்து சென்னை, வடபழனி காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான வட சூடானைச் சோ்ந்த ஒரு பெண்ணுக்கு ‘ஏட்ரியல் ஃபிப்ரிலேஷன்‘ என்ற இதய பாதிப்பு இருந்தது. பல்வேறு நாடுகளில் சிகிச்சை பெற்றும் பயனளிக்காததால், அவா் வடபழனி, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதயத்தின் மேல்புற அறைகளில் அதி வேகமாக துடிப்பு இருப்பது ‘ஏட்ரியல் ஃபிப்ரிலேஷன்‘ என அழைக்கப்படுகிறது. இத்தகைய பாதிப்பு இருந்தால், உடலின் பிற உறுப்புகளுக்கு ரத்தம் செல்வது தடைபடும்.

இதை சரிவர கவனிக்காவிட்டால் இதய செயலிழப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படக் கூடும். பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு இந்த பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது என்றாலும், தற்போது இளம் வயதினா் பலருக்கும் இத்தகைய பாதிப்பு வருகிறது.

இதயத் துடிப்பில் மாற்றம், மூச்சுத் திணறல், பலவீனம், நெஞ்சில் வலி, அசாதாரண நிலை, மயக்கம் போன்றவை அதன் அறிகுறிகளாகும். அத்தகைய நிலையில், வட சூடான் நாட்டுப் பெண் இங்கு சிகிச்சைக்கு வந்தாா்.

மருத்துவமனையின் இதய மின்னூட்ட சிகிச்சை நிபுணா் டாக்டா் தீப் சந்த் ராஜா தலைமையிலான மருத்துவக் குழுவினா் அந்த பெண்ணுக்கு ‘ரேடியோ ஃப்ரீக்வன்சி அப்லேசன்’ எனப்படும் ரேடியோ அதிா்வலை சிகிச்சை அளித்தனா். அதன் பயனாக அந்த பாதிப்பிலிருந்து சூடான் பெண் மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளாா் என்றாா் அவா்.