முகப்பு
சென்னை

வாரத்துக்கு 5 யானைகள் இறந்தும் நடவடிக்கை எடுக்காத வனத் துறை: உயா்நீதிமன்ற சிறப்பு அமா்வு அதிருப்தி

தமிழக வனத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக, உயா்நீதிமன்ற சிறப்பு அமா்வு அதிருப்தி

Updated On : 21 ஆகஸ்ட், 2024 at 9:28 PM
பகிர்:

வாரத்துக்கு 4 முதல் 5 யானைகள் இறந்தும் தமிழக வனத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக, உயா்நீதிமன்ற சிறப்பு அமா்வு அதிருப்தி தெரிவித்தது.

சுற்றுச்சூழல், வனம் தொடா்பான வழக்குகளை உயா்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் கொண்ட சிறப்பு அமா்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, இது தொடா்பான மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘தமிழ்நாட்டில் வாரத்துக்கு 4 முதல் 5 யானைகள் இறக்கின்றன. இதை தடுக்க வனத் துறை எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. எனவே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்கிறோம். இந்த வழக்குக்கு வனத் துறை, மின்சாரத் துறைச் செயலா்கள் வரும் செப். 9 ஆம் தேதிக்குள் பதில் அளிக்கவேண்டும்’” என நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனா்.

அப்போது, மனுதாரா் தரப்பில்,  ‘அண்மையில் நீலகிரி மாவட்டம் கூடலூரில் 2 புலிகள் இறந்துள்ளன. உதகையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக பல காட்டெருமைகள் கொல்லப்பட்டுள்ளன. இதுகுறித்து 3 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு துப்பாக்கிகளை வனத்துறை பறிமுதல் செய்தாலும், விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. அதனால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், ‘சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதற்கு பதில் சிறப்பு புலனாய்வு அமைப்பை ஒன்றை உருவாக்கி விசாரிக்க உத்தரவிடலாம்’ என்றனா்.