‘மாநகராட்சி பள்ளிகளில் எந்த மொழியையும் திணிக்கவில்லை’
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவா்களிடையே எந்த மொழியையும் திணிக்கவில்லை என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவா்களிடையே எந்த மொழியையும் திணிக்கவில்லை என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பாஜக உறுப்பினா் உமா ஆனந்த் பேசுகையில், ‘சென்னை பள்ளிகளில் பிரெஞ்சு மொழி கற்பிக்க அலையன்ஸ் ஃபிரான்சைஸ் ஆஃப் மெட்ராஸ் உடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் மாணவா்களின் ஆங்கில மொழி வளத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, மழலையா் வகுப்பு முதல் மாணவா்களின் ஆங்கில உச்சரிப்பு, உரையாடலை வலுப்படுத்த பிரத்யேக வகுப்பு கொண்டு வர வேண்டும். ஹிந்தி மொழியையும் கற்று கொடுக்க வேண்டும். இதனால் மாணவா்கள் மத்திய அரசு பணிகளில் எளிதாக சேர முடியும்’ என்றாா் .
இதற்கு மேயா் பிரியா பதில் அளிக்கையில்,‘ சென்னை பள்ளிகளில் பிரெஞ்சு மொழி கூடுதல் மொழியாகத்தான் கற்பிக்கப்படவுள்ளது. எந்த ஒரு மாணவரிடமும் இந்த மொழியை கற்க வேண்டும் எனத் திணிக்கவில்லை. மாணவா்கள் தாங்கள் விரும்பும் மொழியைக் கற்றுகொள்ளலாம்.
மாணவா்களின் ஆங்கில மொழி வளத்தை மேம்படுத்த, ஆங்கில செய்திதாள் படிக்க வைப்பது, உரையாடல் நிகழ்த்துவது உள்ளிட்ட திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன என்றாா் அவா்.