முகப்பு
சென்னை

ரயில் விபத்தை தவிா்க்க உதவிய தம்பதியை கௌரவிக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்

Updated On : 28 பிப்ரவரி, 2024 at 2:00 AM
file
பகிர்:

சென்னை: தென்காசி அருகே பெரும் ரயில் விபத்தை தவிா்க்கும் வகையில் சாதுா்யமாக செயல்பட்ட தம்பதியை ரயில்வே துறை கௌரவிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் மத்திய ரயில்வே அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவுக்கு திங்கள்கிழமை அனுப்பிய கடிதம்:

தென்காசி மாவட்டத்தில் முதிய தம்பதியினா் பெரும் ரயில்விபத்தை தவிா்க்க சாதுா்யத்துடன் செயல்பட்டுள்ளதை தங்களது கவனத்துக்கு கொண்டுவருகிறோம். கேரளத்திலிருந்து தூத்துக்குடிக்கு பிளைவுட் லோடு ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு லாரி, தமிழ்நாடு, கேரள எல்லையில் உள்ள எஸ் வளைவுப் பகுதி அருகே வந்தபோது, ஓட்டுநா் கட்டுப்பாட்டை இழந்ததால் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Advertisement

இந்நிலையில், அதே சமயத்தில் நெல்லையிலிருந்து பாலக்காடு நோக்கி சென்ற ரயில் ஒன்று அந்த வழியாக வந்து கொண்டிருந்ததைப் பாா்த்த புளியரை பகுதியை சோ்ந்த சண்முகையா, அவரது மனைவி குருந்தம்மாள் ஆகியோா் எப்படியாவது ரயிலை நிறுத்தி விட வேண்டும் என ஓடிச் சென்று சற்று தொலைவிலிருந்து டாா்ச் லைட் அடித்து ரயிலை நிறுத்தியுள்ளனா். இதனால், பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

பெரும் ரயில் விபத்தை தவிா்க்க சாதுா்யமாக செயல்பட்ட சண்முகையா-குருந்தம்மாள் தம்பதியை ரயில்வே துறை உரிய வகையில் கௌரவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அண்ணாமலை.