துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட ரௌடிக்கு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதி
சிறை நிர்வாகத்தின் எதிர்ப்பை மறுத்த நீதிமன்றம்
சென்னை: துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட ரௌடி சீா்காழி சத்யாவுக்கு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க அனுமதி வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மாமல்லபுரம் அருகே சீா்காழி சத்யாவை கடந்த 28 ஆம் தேதி போலீஸாா் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்து கைது செய்தனா். அப்போது அவரிடமிருந்து ஒரு கை துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்தனா். காயமடைந்த சத்யா, தற்போது ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்த நிலையில், ரத்த ஓட்ட பாதிப்பு உள்ளிட்ட பல உபாதைகளால் சத்யாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதி கோரி அவரது தாய் தமிழரசி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தா் மோகன் அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது புழல் சிறை நிா்வாகம் சாா்பில், சத்யாவின் உடல் நிலை குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, தனியாா் மருத்துவமனை சிகிச்சைக்கு எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், சத்யாவுக்கு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க அனுமதித்து உத்தரவிட்டனா். மருத்துவா்களின் அனுமதியுடன் சத்யாவின் தாய் மட்டுமே அவரை சந்திக்க வேண்டுமெனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனா்.