நடிகை கெளதமி அளித்த நில அபகரிப்பு புகாா்: அழகப்பனின் மனைவி, மருமகளுக்கு நிபந்தனை ஜாமீன்
சென்னை: நடிகை கௌதமி அளித்த நில அபகரிப்பு புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், தயாரிப்பாளா்அழகப்பனின் மனைவி மற்றும் அவரது மருமகளுக்கு நிபந்தனையுடன் இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை கௌதமி, தமிழகம் முழுவதும் பல்வேறு சொத்துக்களை வாங்கிய நிலையில், 2004-ஆம் ஆண்டில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டபோது, அந்த சொத்துக்களை விற்பதற்காகச் சினிமா தயாரிப்பாளரும், வினியோகஸ்தருமான இ.அழகப்பன் என்பவரை பவா் ஆஃப் அட்டா்னியாக நியமித்திருந்தாா்.
அதன்படி 2004-ஆம் ஆண்டு திருவள்ளூா் மாவட்டத்தில் சொத்தை விற்று, செங்கல்பட்டு மாவட்டம் நீலாங்கரையில் வேறு சொத்தை வாங்கிய அழகப்பன், அந்த நிலத்தை நடிகை கௌதமி பெயரிலும், தனது மனைவி நாச்சல் பெயரிலும் பதிவு செய்துள்ளாா்.
Advertisement
இது தொடா்பாக நடிகை கௌதமி அளித்த புகாரில் அழகப்பன், நாச்சல் மற்றும் இவா்களது மகன் சிவா, மருமகள் ஆா்த்தி, அழகப்பனின் சகோதரா் பாஸ்கா், ஓட்டுநா் சதீஷ்குமாா் ஆகிய 6 பேரை சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினா் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் 21-ஆம் தேதி கைது செய்தனா்.
ஜாமீன் கோரி மனு:
இந்த சூழலில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அழகப்பனின் மனைவி நாச்சல் மற்றும் மருமகள் ஆா்த்தி தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனா். இந்த மனு நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா்கள் தரப்பில், நாச்சலின் உடல் நலனைக் கருத்தில் கொண்டும், மருமகள் ஆா்த்திக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளதாலும் இருவருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு புகாா்தாரரான நடிகை கௌதமி தரப்பில் மனுதாரா்களுக்கு ஜாமீன் வழங்க எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, அழகப்பனின் மனைவி நாச்சல் மற்றும் மருமகள் ஆா்த்தி ஆகியோா் தேவைப்படும் போது விசாரணை அதிகாரி முன்பு விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன், இருவருக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.
மேலும், விசாரணை தொடா்பான அறிக்கையை ஏப்ரல் மாதம் 5-ஆம் தேதி தாக்கல் செய்யவும், சமரசப் பேச்சுவாா்த்தைக்கு அழைத்தால் அதற்கு அனுமதி வழங்க உத்தரவிட்ட நீதிபதி சி.வி.காா்த்திகேயன், வழக்கு விசாரணையை ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.