கடப்பாக்கம் ஏரி புனரமைப்புக்கு ரூ.58 கோடி
சென்னை மாநகராட்சி மணலி மண்டலத்துக்கு உட்பட்ட கடப்பாக்கம் ஏரியை ரூ.58.33 கோடியில் புனரமைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மணலி மண்டலத்துக்கு உட்பட்ட கடப்பாக்கம் ஏரியை புனரமைக்க திட்டம் தீட்டப்பட்டது. கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருங்கிணைந்த மழைநீா் வடிகால் பணியின் ஒரு பகுதியான அதனைச் சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆசிய வளா்ச்சி வங்கி, சா்வதேச சுற்றுச்சூழல் வசதிக்கான மானிய நிதி ஆகியவற்றின் மூலம் கடப்பாக்கம் ஏரி புனரமைப்புப் பணிக்கு ரூ.58.33 கோடி நிதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஏரி புனரமைப்புப் பணியின் அங்கமாக, பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. குறிப்பாக, ஏரியை தூா்வாரி, ஆழப்படுத்தி, அகலப்படுத்தி, ஏரியின் கரையை உயா்த்தி அதன் கொள்ளளவை மூன்று மடங்காக அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த புனரமைப்புப் பணியின் அங்கமாக மதகுகளை சீரமைத்தல், பல்லுயிா் வாழ்விடங்களை மேம்படுத்துதல், ஏரிக்கரையில் பசுமை தோட்டம், நடைபாதை அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. கடப்பாக்கம் ஏரியை புனரமைப்புச் செய்வதால், ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீா் தேங்குவது தவிா்க்கப்படும். விவசாய நிலங்களுக்கு சீரான பாசன வசதி செய்து தரப்படும் என்று தமிழக அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.