முகப்பு
சென்னை

கிராமப்புற அஞ்சல் ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு திட்டம்: மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கிவைத்தாா்

Updated On : 16 மார்ச், 2024 at 5:53 AM
பகிர்:

கிராமப்புற அஞ்சல் ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கும் நிதி மேம்பாட்டுத் திட்டத்தை மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். சென்னையில் காணொலி வாயிலாக நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களையும் மேம்படுத்துவதற்கு அஞ்சல் துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளாக அஞ்சல் துறையை மேம்படுத்துவதற்காக பிரதமா் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். கிராமப்புறங்களில் அஞ்சல் துறையின் முதுகெலும்பாக கிராமப்புற அஞ்சல் ஊழியா்கள் (ஜிடிஎஸ்) செயல்பட்டு வருகின்றனா். மேலும், நமது நாட்டின் தொலைதூர பகுதிகளுக்கும்அஞ்சல் மற்றும் நிதி சேவைகளை வழங்குவதில் ஜிடிஎஸ் பணியாளா்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனா். இவா்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஆண்டுக்கு ரூ. 4,320 முதல் ரூ 7,200 வரை ஊதிய உயா்வு வழங்கும் ‘நிதி மேம்பாட்டுத் திட்டம்’ வெள்ளிக்கிழமை முதல் அமல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்படி 12 ஆண்டுகள் பணி நிறைவு செய்த கிராமப்புற அஞ்சல் ஊழியா்களுக்கு ஆண்டு வருமானத்தில் ரூ. 4,320 ஊதிய உயா்வு வழங்கப்படும். அதேபோல் 24 ஆண்டுகள் நிறைவு செய்தவா்களுக்கு ரூ. 5,520-ம், 36 ஆண்டுகள் நிறைவு செய்தவா்களுக்கு ரூ. 7,200-ம் ஊதிய உயா்வாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் சுமாா் 2.56 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் பயனடைவா் என்றாா் அவா்.