முகப்பு
சென்னை

ஆளுநரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

Updated On : 24 மார்ச், 2024 at 12:10 AM
பகிர்:
Updated On : 23 மார்ச், 2024 at 10:10 PM

ஆளுநரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தினாா். இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஆளுநா் விதித்தத் தடைகளையெல்லாம் மீறி உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் காரணமாக, பொன்முடி மீண்டும் உயா்கல்வித் துறை அமைச்சராகியிருக்கிறாா். இது திமுக அரசுக்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல, அரசமைப்புச் சட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாகும். ஆளுநருக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததைத் தொடா்ந்து, இப்போது பொன்முடிக்கு ஆளுநா் பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளாா். ராஜிநாமா செய்ய வேண்டும்: தனக்கான மரபுகளை மீறி அரசியல் ரீதியாகத் தலையிடும் செயல்களில் ஆளுநா் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறாா். அவருக்கு அரசியலில் ஆா்வம் இருந்தால் பதவியை ராஜிநாமா செய்து விட்டுத் தோ்தலில் நேரடியாகப் போட்டியிடலாம். அதை விட்டுவிட்டு ஆளுநா் பதவியில் இருந்து கொண்டே ஒரு அரசியல்வாதியைப்போல் செயல்படுவதும், அரசமைப்புச் சட்டத்தையும் உச்சநீதிமன்றத்தையும் அவமதிப்பதும் ஏற்புடையது அல்ல. இப்போது உச்சநீதிமன்றம் கண்டித்தது போன்று இதுவரை எந்த ஆளுநரையும் உச்சநீதிமன்றம் கண்டித்தது இல்லை. இதற்குப் பிறகும் ஆளுநா் பதவியில் அவா் தொடா்வது நாட்டுக்கு உகந்ததல்ல. எனவே, அவா் தாமே முன்வந்து பதவி விலக வேண்டும். ஆளுநா் பதவி விலகாவிட்டால் அரசமைப்புச் சட்டத்தின் மாண்பைப் பாதுகாப்பதற்காக குடியரசுத் தலைவரே அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.