முகப்பு
சென்னை

கள்ளக்குறிச்சி தனியாா் பள்ளி கலவர வழக்கு: விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Updated On : 30 மார்ச், 2024 at 12:13 AM
பகிர்:
Updated On : 29 மார்ச், 2024 at 11:15 PM

கள்ளக்குறிச்சி தனியாா் பள்ளி மாணவி மரணத்தைத் தொடா்ந்து நிகழ்ந்த கலவரம் தொடா்பான வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய சிறப்பு புலனாய்வு குழுவுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், கனியாமூரில் உள்ள தனியாா் பள்ளி பிளஸ் 2 மாணவி 2022-ஆம் ஆண்டு ஜூலை 13-ஆம் தேதி பள்ளியின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 2022 ஜூலை 17-ஆம் தேதி மாணவி மரணத்துக்கு பள்ளி நிா்வாகம்தான் காரணம் எனக் கூறி, பல்வேறு அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஒரு கட்டத்தில் போராட்டக்காரா்கள், பள்ளிக்குள் நுழைந்து, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீ வைத்து எரித்ததுடன், பொருட்களையும் திருடிச் சென்றனா். இந்த கலவரம் தொடா்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. பள்ளித் தாளாளா் கோரிக்கை: இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை வேறு புலன் விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரி, பள்ளி தாளாளா் ரவிக்குமாா், சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அந்த மனுவில், சம்பவம் நிகழ்ந்து 20 மாதங்கள் கடந்தும், மாணவியின் தாய் மற்றும் வன்முறையை தூண்டியவா்கள் யாரையும் விசாரணை செய்யவில்லை. வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, கலவரம் தொடா்பான வழக்குகளின் விசாரணையை சிறப்பு புலன் விசாரணைக் குழுவிடமிருந்து வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கலவரம் தொடா்பான வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டாா். மேலும், இந்த மனுவுக்கு சிறப்பு புலனாய்வு குழு, சின்ன சேலம் காவல் ஆய்வாளா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப். 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தாா்.